சென்னை : ''பெண்கள் 'டிவி'யில் சீரியல் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில் ஒரு பிரயோசனமும் ஏற்படாது,'' என்று கனிமொழி எம்.பி., கூறினார்.மாநில தி.மு.க., மகளிரணி, தொண்டரணி, பிரசாரக்குழு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் சென்னையில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி., பேசியதாவது:பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்.ஆண்களை விட பெண்கள் ஒருபடி கீழே தான் என்ற நிலை மாற வேண்டும். ஆண்களுக்கு, பெண்கள் சமமானவர்கள் தான் என்ற நிலை அமைய வேண்டும்பெண்கள் அறிவை வளர்த்துக் கொள்ள சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்ள வேண்டும்.
நிறைய படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.விழாவில் தமிழக அமைச்சர்கள் பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி ரவிக்குமார், ஹெலன்டேவிட்சன் எம்.பி., கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக துணை வேந்தர் அருணாசிவகாமி அனந்தகிருஷ்ணன், சக்தி மசாலா உரிமையாளர் சாந்திதுரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாநில தி.மு.க., மகளிரணி தலைவி நூர்ஜகான்பேகம் வரவேற்றார், தொண்டரணி செயலர் காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.