எப்போதும் இல்லாத வகையில், இளைஞர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் பலர் ஆர்வமுடன் போட்டியிடுவதற்கும் பணத்தை செலவிடுவதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை. நிர்வாகிகள் என்றாலே, நியமனம் தான் என்பது இதுவரை இருந்து வந்த நடைமுறை. தேர்தல் நடத்தப்பட்டால், அடிதடியில் முடியும் என்று கட்சி தலைமை பயந்தது தான் இதற்கு காரணம். எனவே, அக்கட்சியினரும் நிர்வாகிகள் நியமனம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.ஆனால் தற்போது மாநிலம் முழுவதும் நடக்கும் இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளுக்கும் தனித்தனி தலைவர், செயலாளர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் ஓரிரு வார்டுகளுக்கு ஒரு இடத்தில் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலும் வாசன் ஆதரவாளர்களும், சிதம்பரம் ஆதரவாளர்களும் போட்டியிட்டனர்.பல இடங்களில் 2000 கட்சி உறுப்பினர்கள் திரண்டு, ஓட்டளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயது இளைஞர்கள். புதிதாக கட்சியில் உறுப்பினர் ஆனவர்கள். இவர்கள் அனைவருமே, தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம் செய்த பிறகு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்கள்.
இக்கூட்டத்தைப் பார்த்து, மற்ற கட்சியினரே மலைத்து விட்டனர்.இனிமேல் இளைஞர் காங்கிரசில் மாவட்ட தலைவர் பதவி இருக்காது என்றும், சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு தனி தலைவர், செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்து, இதற்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் வார்டு தலைவர், செயலாளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். போட்டி ஏன்?: இனிமேல் கட்சியின் எதிர்காலம் ராகுலை சுற்றித் தான் இயங்கப் போகிறது. உ.பி., தேர்தலில், தங்கள் கட்சிக்கு பொறுப்பேற்ற ராகுல், எதிர்பாராத வெற்றி பெற காரணமாக இருந்தார். அதே பாணியைத் தான் தற்போது அவர் தமிழகத்திலும் பின்பற்றுகிறார். இப்போது நடக்கும் தேர்தல், உ.பி., பாணியில் நடத்தப்படுகிறது எனவே, தமிழகத்திலும் எதிர்காலத்தில் இளைஞர்கள் தான் ஆதிக்கம் செலுத்த உள்ளனர். இவர்களுக்கு தான் அடுத்த சட்டபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் 'சீட்' தரப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.இதை மனதில் வைத்து தான், இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிடுவோர், ஏராளமான பணத்தை செலவழித்து, வெற்றி பெற பார்க்கின்றனர்.
சாதாரண கட்சி தேர்தலுக்கு, ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வரை தரப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல்களிலும், கட்சிக்கு செலவிடப்படும் பணமும், இளைஞர் காங்., நிர்வாகிகள் மூலமே வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இப்போது விட்டதை, அப்போது எடுக்கலாம்' என சிலர் கணக்குப் போடுகின்றனர். கட்சி தேர்தலில் பணத்தை அள்ளிவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.எப்படி இருந்தாலும், சத்தமே இல்லாமல் காங்கிரசிற்கு இப்போது கூட்டம் கூடுகிறது. இது, மற்ற கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.