ஆதி விளையாட்டு - கவிதை
என்ன வேண்டும்
கூர் பென்சிலால் ஆப்பிளைச்
சிதைத்தது போன்ற வடிவிலிருந்த
அலட்சியப்பூனை கேட்டது
சொல்லாத பதில்களால் நிரம்பியது
எல்லையற்ற மௌனப் பெருவெளி
மனதுக்கும் உடலுக்கும்
என்ன உறவு
மனம் வசீகரமானது
உடல் உலர்ந்து போகக்கூடியது
பூனைகளைப் பற்றி
நீங்கள் பேசாதீர்கள்
யமுனாவிற்கு மட்டுமே
பூனைகளின் உரையாடல் வசப்படும்
பெண்களைப் பார்த்தே
கழிகிறது பிராயம்
நடுத்தர வயதுக்காரனுக்கு
சலித்துவிடுகிறது புணர்ச்சி
வயதானவர்கள் வெறித்துப்
பார்த்து பொழுதோட்டுகிறார்கள்
காமக்கிணற்றின் கடைப்படியில்
முளைத்திருந்த சிறு புளியங் கன்றுகளில்
தொங்கியபடி ஊஞ்சலாடுகின்றனர்
பேய் பிடித்த காதலிகள்
ஆழ்ந்த பெருமூச்சிற்குப் பிறகு
என்னைப் பார்த்து
பெய்யத் துவங்குகிறது மழை.
- பொன்.வாசுதேவன்