வீடு மாற்றம்....
இடம்பெயர்தல் மனிதனுக்கு கருவிலேயே தொடங்கிவிட்டது. தாய்வயிற்றிலிருந்து இடம்பெயர்ந்தே தரணியில் உலவ ஆரம்பிக்கிறான். ஆறியாவயதில் ஏற்படும் இட மாற்றம் என்பதால் அது மனதில் சஞ்சலங்களை தோற்றுவிக்கவில்லை, ஆனால் காலப்போக்கில் இடம்பெயர்தல்களை சந்திப்பது மனிதனுக்கு நிதர்சனமான ஒன்றாகிவிட்டது.பள்ளி மாற்றம், பணி மாற்றம் என்று ஒவ்வொன்றின் போதும் வசிக்கும் வீட்டின் மாற்றம் கட்டாயமாக நடக்கும் ஒன்றாகும். எனக்கென்னவோ பள்ளிமாற்றங்கள், பணிமாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை காட்டிலும் வீடுமாற்றம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு வீடு மாற்றமும் [அது சொந்த வீடோ வாடகை வீடோ] எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நினைவு பசுமரத்தாணியாக இருக்கும் எங்கள் முதல் வீடு மாற்றம் நிகழ்ந்தது சுமார் 20 வருடங்களுக்கு முன்னால், சுமார் பத்து வருடங்கள் வாடகை வீட்டில் வாசம் செய்த என் பெற்றோர் புது மனைகட்டி என் தமக்கையுடன் புதுவீடு பிரவேசித்த காலமது. அந்த சமயத்தில் நான் என் தாய் வழி பாட்டி வீட்டில் இருந்த காரணத்தால் அது எனக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என் பெற்றோர் இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகின்றனர்.
ஆனால் நான் பணிமாற்றம் காரணமாக பல ஊர்களும் வீடுகளும் மாறியாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புது அனுபவம் என்னை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும். விட்டு போகும் வீட்டிலோ ஏதையோ இழந்ததாக ஒரு சுவடு இருக்கும்.என்றாவது நாம் குடியிருந்த வீட்டில் கால் பதிக்க நேர்ந்தால் நம் சுகங்களும் சோகங்களும் ஒருமுறை நம்மை வருடிச்செல்வது இயல்பானதொரு விஷயமே
"நன்றாக வாழ்ந்து கெட்ட வீட்டின் சமையலறையில் சென்று கேட்டுபார்.....அந்த வீட்டு பெண்களின் அழுகுரல் கேட்கும்" என்று எங்கோ படித்தது இதை எழுதும் போது நினைவில் வருகிறது.கல்யாணமாகாத இளவல்களாக வீடு மாறிய கதைகள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒருவிதம். முதல் முதலாக தனியனாய் என் நண்பனுடன் குடியேறிய வீடு அது. ஒற்றை அறை கொண்ட மேல் மாடி அறையை எங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
குடும்பத்தலைவனை இழந்து 2 மகன்கள் 1 மகளோடு இருந்த அந்த தாய் எங்களையும் அந்த குடும்பத்தின் அங்கத்தினர்களாக்கிக்கொன்டார்.அந்த குடும்பதோடு பல நாள் மொட்டை மாடியில் நிலாச்சோறு சாப்பிட்ட நினைவுகள் இன்னும் பசுமயாய் இருக்கிறது.எங்களோடு எங்கள் இரண்டு நண்பர்கள் இணைய இடப்பற்றாகுறையினால் வீடு மாற நேர்ந்தபோது மனம் சற்றே கனக்கத்தான் செய்தது. வீடு மாறும்போது அந்த வீட்டு பையன்கள் இருவரும் எங்களோடு சேர்ந்து சாமான்களை மாற்ற உதவியதுடன் புது வீடு வந்து விட்டு சென்றது இன்னும் என் மனதில் உள்ளது. இத்தனைக்கும் எங்களுக்குள் அதிக பேச்சுப்புழக்கம் கூட கிடையாது, காரணம் அவர்கள் மராட்டியர்கள், இருந்தும் ஏதோ ஒரு நூலிழை போல் பந்தம் இன்றும் உணரமுடிகிறது. இன்றும் அந்த பக்கம் செல்ல நேர்ந்தால் நான் கால் பதிக்க ஆசைப்படும் வீடு இது
இந்த அனுபவம் இப்படி இருக்க அடுத்த வீட்டின் அனுபவம் வேறு மாதிரி இருந்தது. இரண்டே மாதம் வசித்த இந்த வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சல்களே அதிகம். நான் மறக்க நினைக்கும் விஷயங்களில் இந்த வீட்டில் வாசம் செய்த காலமும் அடங்கும்.ஆனால் இன்னும் என் மனதில் சுவற்று அடுப்புக்கரியாக ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த வீடு மாறியபோது ஏதோ ஒரு பிடியிலிருந்து கழண்டு ஓடுவதாக ஒரு சந்தோஷம் மனதில் இருந்தது.அந்த வீடு விட்டு வந்து ஒரு மாதம் வரை, எங்களை நயமாய் பேசி ஏமாற்றிய அந்த வீட்டு உரிமையாளரின் தொந்தரவு இருந்துகொண்டேதான் இருந்தது.
வசந்தமான நினைவுகளை போன வீடு கொடுத்ததென்றால், இந்த வீடு வருத்தமான நினைவுகளை கொடுத்தது என்பது உண்மை! வீடுமாறும்போது கடைசியாக எதையோ எடுக்க எத்தனித்து ஷெல்ப் சுவர் பற்றி நான் ஏற சுவர் இடிந்தது இதையும் ஒரு காரணமாக கொண்டு அந்த வீட்டு உரிமையாளர் எங்கள் அலுவலகம் வரை வந்து சண்டையிட்டது ஒரு கொடுமையான அனுபவம்.சின்ன சின்ன தவறுகள் எங்கள் மீது இருந்தாலும்,அவர் நடந்துகொண்ட விதம் மிக விசித்திரமாக இருந்தது. சே! இப்படி ஒரு வீட்டில் இருந்தோமே என்று வருத்தபட்டு மாறியவீடு அது. அந்த வீடு மாறிய பின் அந்த வீடு இருந்த வீதியில் செல்ல கூட எங்கள் மனம் ஒப்பவில்லை
அதன் பின் நடந்த வீடு மாற்றங்களில் எதுவும் பெரியதாக நிகழவில்லை வீட்டை பிரியும் முன் எங்களின் பணிமாற்றம் எங்கள் நண்பர்கள் நாங்கள் பிரிந்தது மேலோங்கி இருந்ததால் வீட்டை பிரிதல் மனதில் பெரியதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அதன் பின் மொத்தமாக வீடு மாறியதாய் நினைவில்லை ஏதோ ஒரு அறையில் பேச்சுலராக இணைந்து பின் பணி காரணமாக வீடு மாறி வேறு அறையில் இணைந்து கொண்டதுண்டு. தனியனாய் அறை விட்டு அறை தாவியதில் எந்த ஆழமான உணர்வும் என்னுள் எற்படவில்லை. நாட்கள் நகர வருடங்கள் மாற ஊர் கடந்து நாடு கடந்து வேறு நாட்டில் அமர்ந்திருகிறேன் சமீபத்தில் என்னை பாதித்த வீடு மாற்றமே என்னை எழுத்தத்தூண்டியது எனலாம். என் நண்பனும் என் உடன்பிறவா சகோதிரியான அவன் மனைவியும் வசித்த வீட்டை காலி செய்து மாறிய போது ஏற்பட்ட உணர்வு இது
எங்கள் நட்பு வட்டத்தில் என் நன்பனுக்கு மணமாகி[எங்கள் வட்டத்தில் நிகழ்ந்த முதல் திருமணம்] தனி வீடு எடுத்து குடியேறி சுமார் மூனரை மாதம் வசித்த வீடு இது. ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு "A house is built by bricks but a home is built by love", "கற்களால் கட்டப்படுவது கட்டிடங்கள் மட்டுமே அன்பு மட்டுமே அதை இல்லமாக மாற்றுகிறது" என்பது அதன் உள்ளார்த்தம். நண்பன் குடியேறியபோது கட்டிடமாய் இருந்த வீடு அதை விட்டு செல்லும் போது இல்லமாய் மாறியிருந்தது. நண்பன் வசித்திருந்த மூனரை மாதங்களில் கடைசி ஒரு மாதம் மட்டும் சகோதிரியின் உடல்நிலை காரணமாக நான் அங்கு சென்று வசிக்க நேர்ந்தது. ஒன்றாய் அந்த வீட்டில் வசித்தது ஒரு மாதமெனினும் குடும்பமாய் வாழ்ந்ததால் பிரியும் போது மனம் நீண்ட நாள் வசித்ததாய் உணர்ந்தது. இன்றும் அந்த விடிருக்கும் நகர் பெயர் சொன்னால் எனக்கு அந்நகரின் மற்றேனைய விஷயங்கள் மறந்து வீட்டின் நினைவே முன்னிலை வகிக்கும்
வீடு மாறும் முந்தையநாள் ஒவ்வொரு பொருளாய் எடுத்து வைத்துகொண்டிருக்க ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நினைவை கொண்டுவந்தது. வீடு கழுவி நிமிர்ந்த போது கழுவ முடியாமல் நினைவுகள் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருந்தன. வீடுமாறும் அன்று ஏனைய நண்பர்களோடும் பொருள்களோடும் நான் வீட்டின் வெளியே காத்திருக்க என் நண்பன் ஒவ்வொரு அறையாக சென்று வந்தது அறைகளை சோதிக்க மட்டும் அல்ல என்பதை இதை எழுதும்போது உணர்கிறேன்.