மழைபொழியும்போது பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்துக் கொண்டு என் பாத்திரத்தில் நீர் நிரம்பவே இல்லையே என்பவனை என்னவென்று கூறுவது?
பிரார்த்தனை செய்யும் முறை
மனதை இறைவனிடம் செலுத்துவதே பிரார்த்தனை. இது எளிமையானது. சுலபமானது.
அவ்வப்பொழுது கிடைக்கும் இடைவேளையிலோ அல்லது காலை, மாலையிலோ மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் இருத்துவதே பிரார்த்தனை. எளிய சொற்களால் இறைவனை அழைத்து மனதில் உள்ளதை எடுத்துரைத்து அவன் கருணையை வேண்டுவதே பலரும் செய்து வரும் பிரார்த்தனை முறை.
எப்பொழுதும் பொழியும் கருணை மழை
ரமண மகரிஷியிடம் ஒரு அன்பர் இறைவனின் கருணை எப்போது என் மீது பொழியும் என்று கேட்டார். "அது பொழியாத நேரம் எது? கருணை மழையாகப் பொழிகிறது. அதற்குப் பாத்திரமாயிரு" என்று பதிலளித்தார் மகரிஷி.
மழைபொழியும்போது பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்துக் கொண்டு என் பாத்திரத்தில் நீர் நிரம்பவே இல்லையே என்பவனை என்னவென்று கூறுவது? பாத்திரத்தை நேராக வைத்தால் மழை நீரைப் பிடிக்க முடியும். அதேபோல் பிரார்த்தனை மூலம் கருணையைப் பெற முடியும்.
நல்லெண்ண "ஷீட்டிங்"
'ப்ரேயர்: தி மைட்டியஸ்ட் பவர் இன் தி வோர்ல்டு' என்ற நூலில் பிராங்க் வாபெக் என்பவர் பல பிரார்த்தனை உத்திகளைக் குறிப்பிடுகிறார். அதில் ஒன்றில், தெருவில் செல்லும்போதே மக்களைப் பார்த்து நல்லெண்ண பிரார்த்தனைகளை ஷீட் செய்யுங்கள் என்கிறார். இந்த பிரார்த்தனை ஷீட்டிங் மின்சாரம் போல அவர்களைத் தாக்க, அவர்கள் திரும்பிப் பார்ப்பதாகவும், இதை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து பார்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
அலெக்ஸி காரலின் அற்புதக் கட்டுரை
அலெக்ஸி காரல் என்ற பிரபல மருத்துவ மேதை பிரார்த்தனை பற்றி எழுதிய கட்டுரை, உலகப் பிரசித்தி பெற்றது. பிரார்த்தனையைப் போல வலிமை வாய்ந்தது வேறெதுவும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் கூறுகிறார். அவர் கட்டுரையின் சாரம்:-
"பிரார்த்தனை என்பது வெறும் வழிபாடு மட்டுமில்லை. மனிதனின் வழிபடும் சக்தியின் கண்ணுக்குத் தெரியாத வெளிப்பாடு அது. மனிதன் உருவாக்கக்கூடிய வலிமை வாய்ந்த சக்தி அது. மனித உடலில் உள்ள சுரப்பிகளைப் போலவே பிரார்த்தனையின் சக்தியும் சுலபமாக நிரூபிக்கக் கூடியதுதான். அதனுடைய நல்விளைவுகளை உடலில் ஏற்படும் அதிகமான நிதானம் மற்றும் அதிக மேதைத் தனத்துடன் பிரகாசிக்கும் புத்தி, ஆன்மீக பலம், மனித உறவில் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுதல் இவற்றால் அளந்து விட முடியும்.
நீங்கள் உண்மையான பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டு விட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தீர்க்கமாகவும், வெளிப்படையாகத் தெரியும் அளவிலும் மாறிவிடும். பிரார்த்தனை நமது செயல்பாடுகளில் தனது அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறது. ஒளிமயமாகப் பிரகாசிக்கும் இவர்களின் முகத்திலும், உடலிலும் ஒரு சாந்தி தவழ்வதைப் பார்க்க முடியும். உணர்வின் அடித்தளத்தில் ஒரு தீப்பொறி கிளறப்படுகிறது. அதை மனிதன் தானே பார்க்கிறான். அவன் தனது சுயநலம், அகங்காரம், பயங்கள், பேராசை, பெருந்தவறுகள் இவற்றைக் கண்டுபிடிக்கிறான். அகங்காரமற்ற புத்தி, ஒழுக்கம் பற்றிய கோட்பாடு இவற்றை வளர்க்க ஆரம்பிக்கிறான். கருணையின் விளிம்பை நோக்கி ஆன்மாவின் யாத்திரை இப்படியாகத் துவங்குகிறது."
"புவிஈர்ப்புவிசை போல பிரார்த்தனையும் ஒரு வலிமை வாய்ந்த சக்தி. மருத்துவன் என்ற முறையில், மற்ற எல்லா வழிகளும் தோல்வியால் அடைப்பட்டு மூடிக்கிடக்கும் போது, உண்மையான பிரார்த்தனை மூலம் தங்கள் நோய் நீங்கி நலம் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். "இயற்கையின் நியதிகள்" என்று சொல்லப்படுபவற்றை உலகில் மீறக் கூடிய ஒரே சக்தி பிரார்த்தனைதான்! பிரார்த்தனை அதிசயிக்கத்தக்க முறையில் செயல்பட்டு நல்லவை நடக்கும்போது அவற்றை "அற்புதங்கள்" என்கிறோம். ஆனால் பிரார்த்தனை மூலம் தினசரி வாழ்விற்கு வற்றிடாத ஜீவசக்தி கிடைக்கிறது. இதை உணர்ந்த ஆண்களும், பெண்களும் நிலையான அமைதியான அற்புதத்தை ஒவ்வொரு மணிநேரமும் அனுபவிக்கிறார்கள்.
பிரார்த்தனையை எப்படி விளக்குவது? கடவுளை அடைய மனிதனின் முயற்சி அது. கண்ணுக்குப் புலனாகாத, அனைத்தையும் படைத்த, உயரிய அறிவு, உண்மை, அழகு வலிமையாய் இருப்பதோடு தந்தையாகவும், நம்மை மீட்பவராகவும் இருப்பவரை அடையும் முயற்சி அது. பிரார்த்தனையின் லட்சியம் அறிவுக்கு புலப்படாமல் மறைந்தே இருக்கும். ஏனெனில் மொழியும், சிந்தனையும் கடவுளைப் பற்றி விவரிக்க முற்படும்போது தோல்வியை அடைகிறது.
உண்மையான பிரார்த்தனையே வாழும் வழி; "உண்மையான வாழ்க்கையே பிரார்த்தனை முறை!"
அலெக்ஸி காரலின் அற்புதமான மேற்கண்ட கட்டுரையால் உந்தப்பட்டு எழுச்சி பெற்று புனர்வாழ்வு பெற்றோர் ஆயிரக்கணக்கானோர்.
"அதிகாலையிலும், பகலிலும், மாலையிலும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வோமாக. இறைவனே எங்களுக்கு நம்பிக்கையை அருள்வாயாக" என்ற ரிக்வேத பிரார்த்தனை மனதில் இருத்த வேண்டிய ஒன்றாகும்.
நமது பிரார்த்தனை பரம்பொருளின் செவியில் விழும் போது, அற்புதங்கள் நம்முடைய வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகளாகி விடும் என்கிறார் மகரிஷி அரவிந்தர்.
ஆகவே, எல்லையற்ற, அளப்பரிய, கருணை மயமான பெருஞ்சக்தி நமது வெற்றிக்கு உதவிபுரியச் சித்தமாகக் காத்திருக்கிறது.
ஆகவே வெற்றி அடைய விழையும் சாதனையாளர்கள் அனைவரும் பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து அதைப் பூரணமாகப் பயன்படுத்துவதோடு, இறை நம்பிக்கையைக் கொள்ள வேண்டுவது இன்றியமையாததாகும்.
வெற்றியாளர் அடைய வேண்டிய பதினாலாவது குணாதிசயம் இறை நம்பிக்கையே!
===================================
- ச.நாகராஜன்