Click "Like" Button To Join | |
| | பாஞ்சாலி சபதம் (1) | |
| | Author | Message |
---|
Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம் (1) Sat Apr 17, 2010 4:17 pm | |
| (சென்னை காந்தி கல்வி மையத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம்)
இயல்-1 : தோரண வாயில்
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தந்து தாய்மொழிக்குப் புத்துயிர் தர விழைந்த பாரதியின் உணர்ச்சிக் காவியம்தான் பாஞ்சாலி சபதம். ஓரிரண்டு வருடத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லாருக்கும் பொருள் நன்கு விளங்க வேண்டும். அதே நேரத்தில் காவியத்துக்குள்ள நயங்கள் குறையக் கூடாது. இந்த வேட்கையுடன் ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக இந்தக் காவியத்தை இயற்றியுள்ளதாக பாரதி சொல்கிறான்.
பாஞ்சாலி சபதம் வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. திருதராஷ்டிரன் உயர்ந்த குணங்கள் உள்ளவன்; சூதில் விருப்பமில்லாதவன்; துரியோதனனிடத்தில் வெறுப்புள்ளவன் என்றெல்லாம் பாரதி சித்திரித்திருப்பது வியாச பாரதத்தின் அடிப்படையிலேயே. பருந்துப் பார்வையில் பாஞ்சாலி சபதத்தின் பின்புலமான வியாச பாரதத்தைப் பார்ப்போம். நமக்கு ஆதாரம் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து.
விசித்திரவீர்யன் என்ற மன்னனுக்கு பாண்டு, திருதராஷ்டிரன் என்று இரண்டு மகன்கள். திருதராஷ்டிரன் பிறவியிலேயே கண் பார்வை அற்றவன். பாண்டு அரச பதவி ஏற்றான். பின்னர் வனத்துக்கு தவம் செய்யப் போய் அங்கேயே வசித்தான். பாண்டு மைந்தர்கள் யெளவனப் பருவம் எய்தியதும் அவர்களை ரிஷிகள் பீஷ்மரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் வேத வேதாந்தங்கள், மற்றும் க்ஷத்திரியர்களுக்கு வேண்டிய கலைகளைப் பயின்று தேர்ச்சி பெற, திருதராஷ்டிரன் மைந்தர்களான கெளரவர்களுக்கு அவர்களிடம் பொறாமை உண்டாயிற்று. பல தீங்குகள் செய்தனர். குலகுரு பீஷ்மரின் சமாதானத்தின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் கெளரவர்கள் ஹஸ்தினாபுரத்திலுமாக தனியாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சூதாட்டம் நடை பெற, கெளரவர்களுக்காக ஆடிய சகுனி பாண்டவரில் மூத்தவரான யுதிஷ்டிரரைத் (தரும புத்திரர்) தோல்வி அடையச் செய்து அதன் பலனாகப் பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசத்திலும், 12 ஆண்டுகள் ஆரண்யத்திலும், 13ம் ஆண்டு தலைமறைவாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை. அதன் பிறகும் சொத்தை அபகரித்துக் கொண்டிருந்த துரியோதனன் அதைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அதன் பேரில் யுத்தம் நடந்தது. பாண்டவர்கள் துரியோதனாதியரைக் கொன்று சாம்ராஜ்யத்தை அடைந்தார்கள். இதற்கு மேல், பாண்டவர்கள் 36 ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்தார்கள். பிறகு பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் சூட்டி விட்டு, பாண்டவர்களும் திரெளபதியும் மர உரி தரித்து வனம் சென்றார்கள்.
இந்தப் பின்னணியில் பாஞ்சாலி சபதப் பகுதியைப் பார்ப்போம்.
அத்தினாபுரத்தை ஆண்டு வந்த துரியோதனுக்கு பாண்டவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது. அதிலும் பாண்டவர்கள் நடத்திய வேள்விக்கு பன்னாட்டு மன்னர்கள் வந்து பரிசில்களைக் கொட்டியது, அவன் தடுமாறி விழுந்தபோது திரெளபதி நகைத்தது, கண்ணனுக்கு முதல் மரியாதை அளித்தது ஆகியவை அவன் கோபத்தையும் பொறாமையையும் தூண்டி விட்டன.
மாமன் சகுனியின் உதவியுடன், தந்தை திருதராஷ்டிரனின் அனுமதியை வற்புறுத்திப் பெற்று தருமபுத்திரர் சகோதரர்களை விருந்துக்கு அழைக்கிறான். விருந்துக்கு வரும் அவர்களை சூதுக்கு அழைத்து வஞ்சகமாக வென்று, அவர்களது அனைத்து சொத்துக்கள், ராஜ்யம், சகோதரர்கள், பின்னர் தருமபுத்திரர் தம்மையே இழக்க வைக்கிறான். இறுதிக் கட்டமாகப் பாஞ்சாலியையும் சூதில் வென்று அரசவைக்கு அவளை இழுத்து வந்து, துகில் உரிய வைத்து அவமானப்படுத்த முனைகிறான்.
பாஞ்சாலி நீதி கேட்டும் பயனில்லாத நிலையில் கண்ணனிடம் சரணாகதி அடைய, அவளது சேலை இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே போகிறது. வேறு வழியின்றி துகிலுரியும் முயற்சியை துச்சாதனன் கைவிட, பீமனும் அருச்சுனனும் இந்தக் கொடுமைக்குப் பழி வாங்கப் போவதாகச் சூளுரைக்கிறார்கள். துரியோதனன், துச்சாதனன் இவர்களது குருதியைக் குழலில் பூசி நறுநெய்யிட்டுக் குளித்த பிறகே கூந்தலை முடிப்பேன் என்று பாஞ்சாலி சபதம் இடுகிறாள்.
பாஞ்சாலி சபதத்தை, கள்ளையும் தீயையும் சேர்த்து, காற்றையும் வானவெளியையும் சேர்த்து பாரதி ஆக்கிய தீஞ்சுவைக் காவியம் என்று திண்ணமாகச் சொல்லலாம். அவனது தலை சிறந்த காவியம் என்று இதைச் சொல்ல முடியும். கவிச்சுவை "நனி சொட்டச் சொட்ட"க் கிடைக்கிறது. பாரதியின் மூச்சுக் காற்றான பாரத தேசத்துப் பற்று காவியம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. பண்டைய நிலையைச் சொல்லிப் பரவசமும், இன்றைய நிலையை எண்ணி ஏக்கமும் நெஞ்சு பொறுக்காத கோபமும் வெளிப்படுகின்றன.
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது. இவர்களே தேவலை, தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்தச் சக்கரவட்டமாகப் பேசுகிற அறிவு ஜீவிகளை மோதி மிதித்து விட வேண்டும் போல் அவனுக்கு ஏற்படுகிற ஆக்ரோஷம் நம்மைத் தாக்குகிறது. அரச நீதி, ஜனநாயக நெறி, செல்வந்தர்களின் கடமை, பொறாமையும் காமமும் இட்டுச் செல்லும் அழிவுப் பாதை போன்ற நன்னெறிகளும் இந்தக் காவியத்தில் பாரதி வாயிலாக வெளிப்படுகின்றன.
வாருங்கள், காவியத்துக்குள் நுழைவோம்
(தொடரும்)
[b]THANKS:
நெல்லைச்சாரல்
Last edited by Fathima on Sun May 30, 2010 8:58 am; edited 1 time in total | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம் (2) Sun Apr 18, 2010 6:40 am | |
| துரியோதனின் பொறாமை
காவியத்தில் முதலில் நகர வருணனை. அத்தினாபுரத்தை வருணிக்கப் போகும் பாரதிக்கு, கண் முன் பண்டைய பாரத நகரங்களின் சிறப்புதான் கண் முன் விரிகிறது. வருணிக்கத் தொடங்குகிறான். ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் மாதிரிக்கு.
"நல்லிசைமுழக்கங்களாம்-பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம் தொல்லிசைக் காவியங்கள்-அருந் தொழிலுணர் சிற்பர் செய் ஓவியங்கள் கொல்லிசை வாரணங்கள்-கடுங் குதிரைகளொடு பெரும்தேர்களுண்டாம்! மல்லிசைப் போர்களுண்டாம்;-திரள் வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண்டாம்! எண்ணரும் கனிவகையும் –இவை இளகி நல் ஒளிதரும் பணி வகையும் தண்ணறும் சாந்தங்களும்-மலர்த் தார்களும் மலர்விழிக் காந்தங்களும் சுண்ணமும் நறும் புகையும்-சுரர் துய்ப்பதர்குரிய பல்பண்டங்களும் உண்ணநற் கனிவகையும்-களி உவகையும் கேளியும் ஓங்கினவே!"
கவிஞன் வாழ்ந்த காலத்தில் வணிகர்களும் பணக்காரர்களும் அரசுக்கு, அதிகாரிகளுக்கு, கள்வர்களுக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. பண்டைய பாரதத்தில் எப்படி?
"தவனுடை வணிகர்களும்-பல தன்னுடைத் தொழில் செயும் மா சனமும் எவனுடைப் பயமும் இலாது-இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே!"
துரியோதனன் அவை. எப்படிப்பட்டவன் அவன்? "நெஞ்சத் துணிவுடையன். முடி பணிவு அறியான். கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான்." இப்படிப்பட்டவன் பொறாமை, பேராசை மற்றும் காமவயப்பட்டு எப்படி நிலை தடுமாறி, சின்னக்குழந்தை போல் அழுது பரிதவித்து இரங்கி நிற்கின்றான் என்பதை எல்லாம் பின்னால் பார்க்கப் போகிறோம்.
அவையில் உள்ளவர்களை அறிமுகப் படுத்துகிறான் பாரதி. எப்படி? இதோ பீஷ்மன். அந்தம் இல் புகழுடையான்; ஆரிய வீட்டுமன். அறம் அறிந்தோன்.
வித்தியாசத்துக்கு விதுரனைப் பற்றி என்ன சொல்கிறான் என்று பார்ப்போம், "மெய்ந்நெறி உணர் விதுரன்"
பீஷ்மருக்கு எல்லா நியாயமும் தெரியும். அறிவது வேறு, அதை உள்வாங்கிகொண்டு செயல்படுத்துவது வேறு. திட்ட வட்டமாகச் செயல் பட வேண்டிய நேரத்தில் வெறும் விஷய அறிவு படைத்தவன் எப்படி நடந்து கொள்வான்? நெறி உணர்ந்தவன் எப்படி நடந்து கொள்வான்? இந்த வித்தியாசத்தை பீஷ்மன் , விதுரன் பற்றிய ஒற்றை வரி அறிமுகத்தில் தெளிவாகக் கொண்டு வந்து விடுகிறான் கவிஞன்.. கதை மேற்கொண்டு செல்லும் போது இந்த விளக்கம் எவ்வளவு பொருத்தமானது என்று பார்க்கத்தானே போகிறோம்?
எவ்வளவு செல்வமும் வளமும் இருந்த போதிலும் மற்றவர்களது வளங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளும்போது மனது கோப வசப்படுகிறது. ஆத்திரம் உண்டாகிறது. எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறது. செல்வனும் மனத்தளவில் ஏழையாகிப் பரிதவிக்கிறான்!
பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும். பஞ்சையாமொரு பெண் மகள் போலும்,பாலர் போலும் பரிதவிப்பார்கள்! பாதகரோடு கூடி உறவெய்தி நிற்பார்கள்! இதுதான் நிகழ்கிறது, துரியோதனன் விஷயத்தில்.
அவன் புலம்பலைக் கேளுங்கள்:-
பாண்டவர் முடி உயர்த்தே-இந்தப் பார்மிசை உலவிடு நாள் வரை, நான் ஆண்டதொர் அரசாமோ?-எனது ஆண்மையும் புகழும் ஓர் பொருளாமோ?
"எப்படிப் பொறுத்திடுவேன்?" என்று அரற்றுகிறான்.
"தந்தத்தில் கட்டில்களும்-நல்ல தந்தத்தில் பல்லக்கும், வாகனமும், தந்தத்தில் பிடிவாளும்-அந்தத் தந்தத்திலே சிற்பத் தொழில் வகையும் தந்தத்தில் ஆசனமும்-பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும் தந்தத்தைக் கணக்கிடவோ??-முழுத் தரணியின் திருவும் இத் தருமனுக்கோ?"
என்று இவ்வாறு ஏழையாகி இரங்குகின்றான்.
"எப்படிப் பட்ட துரியோதனன்?" "அவன் திறத்தொரு கல் எனும் நெஞ்சன்.வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்." எப்படி ஆகி விட்டான் பாருங்கள்!
"யாது நேரினும், எவ்வகையானும், யாது போயினும், பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திடுவது" என்று தீர்மானம் செய்து விட்டான்!
வேள்வியில் துரியோதனை வெதுப்பிய செயல்கள் வேறு சிலவும் உண்டு. கண்ணைப் பறித்திடும் இள மங்கையர்களை, மன்னர்கள் வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்கட்கு. முதல் உபசாரம்,யாதவர் குலக் கோன் கண்ணனுக்கு, துரியோதனனுக்கு அல்ல. இவையெல்லாம் போக, தடுமாறி அவன் விழுந்தபோது "ஏந்திழையாளும்" அவனைப் பார்த்து நகைத்து விட்டாள்!
இத்தனையையும் மாமன் சகுனியிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான் துரியோதனன். மாமன் என்ன செய்கிறான்? [b] | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம் (3)[4] Sun Apr 18, 2010 6:44 am | |
| சகுனியும் துரியோதனனும் திரிதராஷ்டிரனிடம்..
சகுனியிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான் துரியோதனன். "தீச்செயல், நற்செயல் ஏதேனும் ஒன்று செய்து, அவர்கள் செல்வம் கவர்ந்து அவர்களை நடுத் தெருவில் விட வேண்டும்" என்ற தன் உள்ளக்கிடக்கையைச் சொல்லி, அதற்கான உபாயம் சொல்லுமாறு வேண்டுகிறான்.
"அட, இதுக்கா அலட்டிக்கிறே! இது ஒன்றும் பிரமாதமில்லே!" என்று சொல்லி, உபாயம் சொல்கிறான் மாமன் சகுனி. போர் புரிவோம் என்றால் அதில் வெற்றி தோல்வி யாருக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சூதுக்கு அழைத்து அவர்களை வஞ்சகமாக வென்று செல்வம் அத்தனையும் கவர்ந்து விடலாம் என்பது சகுனியின் திட்டம். ஆனால் இதற்குத் தந்தை திரிதராஷ்டிரனின் சம்மதம் தேவை.
இன்றைய வணிக விற்பன்னர்களுக்கு இணையான பேச்சுத் திறம் பெற்றவன் சகுனி. இவர்கள்தான் எஸ்கிமோக்களிடம் கூட குளிர் பதனப் பெட்டி விற்று விடும் வல்லமை படைத்தவர்களாயிற்றே!
எப்படி அணுகுகிறான் சகுனி, பார்ப்போம்!
துரியோதனனைத் தந்தையிடம் அழைத்துச் சென்று நிறுத்துகிறான்.
"மைத்துனரே! கேட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் பிள்ளை,
"உண்ப சுவையின்றி உண்கின்றான்-பின் உடுப்பது இகழ உடுக்கின்றான்-பழ நண்பர்களோடு உறவு எய்திடான்-இள நாரியரைச் சிந்தை செய்திடான்-பிள்ளை கண் பசலை கொண்டு போயினான்-"
திரதராஷ்டிரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு என்ன குறை? எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. நினைத்த பொருள்கள் எல்லாம் கிடைப்பதற்கு எதுவும் தடை இல்லை. அற்புதமான ஆடைகள்; அமுதை ஒத்த உணவு!
துரியோதனனின் மனத்தில் வீசிக் கொண்டிருந்த மவுனப் புயல் அவனுக்குத் தெரியவில்லை. தொடர்கிறான்:" இத்தனைக்கும் மேலாக இன்னும் அப்பாண்டவச் சகோதரர் உனக்குக் கிடைத்திருக்கிறார்களே!" என்கிறான்.
அதுதானே பிரச்சினை? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது துரியோதனனுக்கு. சினந்து வெறியோடு பேசுகிறான். அவனைக் கொஞ்சம் அடக்கி விட்டு, சகுனி தொடர்கிறான்:-
"பாண்டவர்செல்வம் விழைகின்றான்-புவிப் பாரத்தை வேண்டிக் குழைகின்றான்-மிக நீண்ட மகிதலம் முற்றிலும் –உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான்-குலம் பூண்ட பெருமை கெடாதவாறு-எண்ணிப் பொங்குகின்றான்; நலம் வேட்கின்றான்-மைந்தன் ஆண் தகைக்கு இஃது தகும் அன்றோ?-இல்லை யாம் எனில் வையம் நகும் அன்றோ?"
திரிதராஷ்டிரனுக்கு சகுனியின் மீதுதான் கோபம் வருகிறது."அட, பிள்ளையை நாசம் புரியவே, ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய்!" என்று கடிகிறான். "சகோதரர்களுக்குள்ளே பகை கொள்ளலாமா? பிள்ளைப் பருவத்திலிருந்தே இவன் அவர்களுக்குப் பல தீங்குகள் செய்திருந்தும், அவர்கள் இவன் மீது பகை பாராட்டியது உண்டா? தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்?"
மேலும் சொல்கிறான்:-
"மயல் அப்பி விழி தடுமாறியே-இவன் அங்கும் இங்கும் விழுந்து ஆடல் கண்டு-அந்தத் துப்பிதழ் மைத்துனி தான்சிரித்-திடில் தோஷம் இதில் மிக வந்ததோ?"
"தவறி விழுபவர் தன்னையே-பெற்ற தாயும் சிரித்தல் மரபன்றோ?"
"கண்ணனுக்கு உபசாரங்கள் செய்தார்கள் என்கிறாய். பின் அண்ணன் தம்பி ஒருவருக்கு ஒருவரா உபசாரம் செய்து கொள்வார்கள்?"
திரிதராஷ்டிரன் இப்படிப் பேசவும் துரியோதனனுக்குக் கோபம் சுருக்கென்று தலைக்கேறுகிறது. அவன் பேசுவதில் சிலவற்றை பாரதியின் கவிதை வரிகளிலேயே கேட்போம்:-
"பாம்பைக் கொடி என்று உயர்த்தவன்-அந்தப் பாம்பெனச் சீறி மொழிகுவான்-அட! தாம் பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும் தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை- மிக்க சருக்கரை பாண்டவர்-அவர் தீம்பு செய்தாலும் புகழ்கிறான்- திருத் தேடினும் என்னை இகழ்கின்றான்.
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான்-புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான்-நல்ல சாதமும் நெய்யும் எனக்கு என்றான்-எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் –அட! ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல்-வைக்கும் அப்பன் உலகினில் வேறுண்டோ?-உயிர்ச் சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை சொல்ல இனி இடம் ஏதையா?"
"முடிவாக ஒன்று சொல்கிறேன். நமக்குத் தீங்கு வராமல் வெற்றி பெறுவதற்கு வழி ஒன்று உண்டு. சூதுக்கு அவர்களை அழைத்து அதில் தோற்க வைத்து விடலாம். இதற்குத் தடை எதுவும் சொல்லாமல் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்"
திரிதராஷ்டிரன் என்ன செய்கிறான் என்பதை அடுத்து.........
********************************************************************************************************************************
போச்சுது நல்லறம்!
துரியோதனன் சொன்ன தீமொழிகளைக் கேட்டு திரிதராட்டிரன் தன்னைத் தானே நொந்து கொள்கிறான். "பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்!". என்றாலும் உபதேசமும் செய்கிறான். செல்வம் பெற்றதற்கு இலக்கணம் என்ன என்று இங்கு திரிதராட்டிரன் வாயிலாக பாரதி வரையறுத்துக் கூறுகிறான்:
"தம் ஒரு கருமத்திலே, நித்தம் தளர்வறு முயற்சி; மற்றோர் பொருளை இம்மியும் கருதாமை; சார்ந்திருப்பவர் தமை நன்கு காத்திடுதல்."
இவை எல்லாம் கொடிய மகன் காதில் விழுந்தால்தானே? தன் கருத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொல்கிறான். ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தந்தைக்கு.
"விதி!விதி!விதி! மகனே-இனி வேறெது சொல்லுவன் அடமகனே!"
என்று சொல்லி ஓய்ந்து விடுகிறான்.
தொடர்ந்து தம்பி விதுரனை அழைத்து, பாண்டவர்களை அழைத்து வர அனுப்புகிறான். ”அழகான மணிமண்டபம் ஒன்று அமைத்துள்ளோம்; அதற்கு உங்களை அழைத்து விருந்து தர வேண்டும் என கூடும் வயதில் கிழவன் விரும்பிக் கூறினன்” என்று சொல்லச் சொல்கிறான். அதனோடு, விதுரனிடம் தனியாக ஒரு சங்கதியும் சொல்கிறான், ”பேச்சின் இடையில், சகுனி சொல் கேட்டு, பேயெனும் பிள்ளை கருத்தினில் கொண்ட தீச் செயல் இது என்று குறிப்பால் செப்பிடு” என்றும் சொல்லி அனுப்புகிறான்.
இதைக் கேட்டு விதுரன் புலம்பும் புலம்பலில், பாரதியின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது,
"போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்"
விதுரன் தூது செல்கிறான். அவன் போகும் வழியை விவரிக்கும் முகத்தான், பண்டைய பாரதத்தின் வளத்தைச் சொல்கிறான் கவிஞன். மாதிரிக்கு ஒரே ஒரு பாடல்.
"பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும் நாடு, பெண்களெல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு, வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு!"
விதுரன் பாண்டவர்களிடம் சென்று செய்தி சொல்கிறான். திரிதராட்டிரன் சொல்லி வைத்த எச்சரிக்கையையும் சொல்கிறான். கடைசியாக, "சொல்லிய குறிப்பறிந்தே நலம் தோன்றிய வழியினைத் தொடர்க!" என்று முடித்து விடுகிறான்.
அழைப்பை ஏற்பதற்கு தம்பியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தருமன் அவர்களை ஏற்க வைத்து விடுகிறான்.
"மருமங்கள் எவை செயினும்-மதி மருண்டு அவர் விருந்து அறம் சிதைத்திடினும் கருமம் ஒன்றே உளதாம்-நங்கள் கடன்: அதை நெறிப் படி புரிந்திடுவோம்"
என்று கூறி விடுகிறான். "ராமன் கதை தெரியாதா? தந்தை வரப் பணித்தான்; சிறு தந்தையும் தூது வந்து சொல்லி விட்டான். பணிவது நம் கடமையல்லவா?" என்கிறான்.
மேலும் இங்கு ஒரு பெரிய தத்துவம் வெளியிடப் படுகிறது. "Task on hand" என்பதுதான் சுதர்மம். பல பட யோசித்து அவ்வப்போது செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் விடக்கூடாது.
"சேற்றில் உழலும் புழுவிற்கும்-புவிச் செல்வமுடைய அரசர்க்கும்-பிச்சை ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும்-உயிர் எத்தனை உண்டு? அவை யாவிற்கும்-நித்தம் ஆற்றுதற்குள்ள கடமைதான் முன்வந்து அவ்வக் கணம்தொறும் நிற்குமால்-அது தோற்றும் பொழுதில் புரிகுவார்-பல சூழ்ந்து கடமை அழிப்பரோ?"
வழி நடக்கிறார்கள். பின்னணியில் பாரதி சோகக் குரல் கொடுக்கிறான்;
"நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும், வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்!" மாலை நேரத்தில் சந்தியாவந்தனம் செய்கிறார்கள் பாண்டவர்கள். காயத்ரி மந்திரத்தை இங்கு தமிழில் தருகிறான் பாரதி.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!"
கால இடம் பற்றிய சிந்தனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு பாரதியின் மாலை நேர வருணையை இங்கு கொஞ்சம் தொட்டுச் செல்வோம். வெறுமனே கதை கேட்டுப் போகிற ஆசாமிகளா நாம்? கவிதையையும் கொஞ்சம் ரசிப்போமே?
"கணம்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்; கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் கணம் தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?"
அடிவானத்தே அங்குப் பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய்
இடிவானத்தொளி மின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே மொய்குழலாச் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
பார்;சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட்டெரிவன!ஓகோ! என்னடீ இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! ..........
நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள்!சுடரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிகரங்கள்!காணடி,ஆங்குத் தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும் இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்!ஒளித்திரள்! வன்னக்களஞ்சியம்!
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்று, சுடர் மங்கிடும் முன்பு வந்தார்கள், பாண்டவர்கள். எங்கே? ஒளி மங்கும் நகருக்கு!
அங்கே....
[b] | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம் (5)[6] Sun Apr 18, 2010 6:48 am | |
| கலி மகிழ்ந்தான்!
துரியோதனன் சபை. சகுனி யுதிஷ்டிரனைச் சூதுக்கு அழைக்கிறான். யுதிஷ்டிரன், ”உன் மனத்தில் வன்மம் இருக்கிறது. எங்கள் வாழ்வைக் கெடுக்க நினைக்கிறாய். சூதினால் எங்களைக் கவிழ்க்கப் பார்க்கிறாய்” என்று சொல்லிச் சூதாட வர மறுக்கிறான். கலகல என்று நகைக்கிறான், சகுனி. ”நீ ஒரு பிசுனாரி என்பது எனக்குத் தெரியாமல் போச்சுப்பா! இவ்வளவு பெரிய மண்டபத்தில் பட்டப் பகலில், இவ்வளவு பேர் கூடி இருக்க, உன் சொத்தை அபகரித்து விடுவேன் என்று எப்படி நினைக்கிறாய்?”
”பாரத மண்டலத்தார்-தங்கள் பதிஒரு பிசுனன் என்று அறிவேனோ? சோரம் இங்கு இதிலுண்டோ? - தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ? மாரத வீரர் முன்னே - நடு மண்டபத்தே;பட்டப்பகலினிலே சூர சிகாமணியே - நின்றன் சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ?”
இப்படிச் சொல்லி எள்ளி நகையாடுகிறான்.
செல்வம், பெருமை இவற்றைக் காப்பதற்காக சூதுக்கு வர நான் மறுக்கவில்லை. ஓதலாலும், உணர்த்துதலாலும், உண்மை சான்ற கலைத்தொகை யாவும் சாதல் இன்றி நான் அரசாண்டு வருகிறேன். எனக்கு இடர் செய்பவர் என்று நான் கருதுவது, என் செல்வத்தினை வஞ்சனையால் கொள்பவர் அல்லர், ஆனால், நான்மறை நெறியைக் கொல்பவர்கள், கலைத் தொகை மாய்ப்பார், என் உயிர்ப் பாரத நாட்டுக்கு பீடை செய்யும் கலியை அழைப்பாரே எனக்கு இடர் செய்பவர்கள். இந்த தீய சிந்தனையை விட்டு விடு”என்று இறைஞ்சிக் கேட்கிறான்.
பல விதங்களில் வஞ்சகமாகப் பேசி யுதிஷ்டிரனைச் சூதுக்கு இணங்க வைத்து விடுகிறான் சகுனி.
“ மாயச் சூதினுக்கே - ஐயன் மனம் இணங்கி விட்டான்; தாயம் உருட்டலானார் - அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்! நேயமுற்ற விதுரன் போலே நெறி உளோர்கள் எல்லாம் வாயை மூடி விட்டார் - தங்கள் மதி மயங்கி விட்டார்”
இப்போது சகுனிக்காகப் பந்தயப் பணம் துரியோதனன் வைக்கிறான். “ஒருவன் ஆடப் பணயம் இன்னொருவன் வைப்பது எப்படி சரியாகும்?” என்று யுதிஷ்டிரன் கேட்ட கேள்விக்கு, ”மாமன் ஆடப் பணயம் மருகன் வைக்கொணாதோ? இதில் வந்த குற்றமேதோ?” என்று ஒரே அடியாக அடித்து விட்டான் துரியோதனன்.
ஒவ்வொரு உடைமையாகப் பணயம் வைக்கிறான் தருமன். ஒவ்வொன்றையும் இழக்கிறான்.
”மாடிழந்து விட்டான்; - தருமன் மந்தை மந்தையாக; ஆடிழந்து விட்டான்; - தருமன் ஆளிழந்து விட்டான்!
பீடிழந்த சகுனி - அங்குப் பின்னும் சொல்லுகின்றான்; நாடிழக்கவில்லை, - தருமா! நாட்டை வைத்திடென்றான்!
இந்தத் தருணத்தில் விதுரன் துரியோதனனுக்கு நல்ல புத்தி சொல்ல விழைகின்றான்.
“தம்பி மக்கள் பொருள் வெகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே? நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ? நாதன் என்றுனைக் கொண்டவரன்றோ?”
சினந்து சீறுகிறான் துரியோதனன். சிற்றப்பன் என்றும் பாராமல் அவமதித்துப் பேசுகிறான்.
“நன்றி கெட்ட விதுரா! - சிறிதும் நாணமற்ற விதுரா! தின்ற உப்பினுக்கே - நாசம் தேடுகின்ற விதுரா! அன்று தொட்டு நீயும் - எங்கள் அழிவை நாடுகின்றாய்! மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன்!
ஐவருக்கு நெஞ்சும் - எங்கள் அரமனைக்கு வயிறும் தெய்வம் அன்று உனக்கே - விதுரா! செய்து விட்டதேயோ?”
“விதி வழி தெரியும். என்றாலும் வெள்ளை மனம் படைத்ததனால் சொல்ல வந்தேன்! சரி, சரி, இங்கு பேசிப் பயன் இல்லை என்று உன் புத்திப்படி நடந்து கொள்” என்று சொல்லி விதுரன், வாய் மூடி, தலை குனிந்து, இடத்தில் அமர்ந்தான்.
“பதிவு றுவோம் புவியில் எனக் கலி மகிழ்ந்தான்! பாரதப் போர் வரும் என்று தேவர் ஆர்த்தார்!”
************************************************************************************************************************************************************************************************
முதல் முழக்கம்!
நாட்டைப் பணயம் வைக்கிறான் தருமன். இழக்கிறான். பொங்கி எழுகிறான் பாரதி. அருமையான நெறிமுறையைச் சொல்கிறான். தேசம் என்பது அரசனின் தனிப்பட்ட சொத்தல்ல. அவன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது அவன் கடமை. குடிபுறம் காத்தோம்பல் அல்லவா மன்னர் கடன்? காந்திஜி சொல்லும் தர்மகர்த்தா தத்துவமல்லவா பாரதியின் வழியாக வெளிப்படுகிறது?
உண்மை காட்டும் நூல்கள் பல இருந்தாலும், மனிதர்கள் ராஜ நீதியை நன்கு செய்யாமல் விட்டுப் போய் விட்டார்கள். நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் எறு கருதார்; ஆட்டு மந்தை என்று எண்ணி விட்டார்கள்! ஓரம் செய்திடாமல், தருமத்து உறுதி கொன்றிடாமல், பிறரைத் துயரில் வீழ்த்திடாமல், உலகை ஆளும் முறைமை, உலகில் ஓர் புறத்தும் இல்லை! பின் நாம் பேசுவது எல்லாம் சாரமில்லாத வெட்டிப் பேச்சு! ஆயிரம் நீதி உணர்ந்த தருமன் என்ன செய்தான்? கோவில் பூஜை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் இப்படி ஒரு காரியம் செய்து விட்டானே? அவனைப் பற்றி முடிந்த முடிவாக பாரதி சொல்லும் வார்த்தை, “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்!”
தருமன் அடுத்தடுத்து ஒவ்வொரு தம்பியாக வைத்து இழக்கிறான். அடுத்து, தன்னையே பணயம் வைக்கிறான். தோற்றுப் போகிறான்!
துரியோதனன், “பாண்டவர்களின் ராஜ்யம், நிதி எல்லாம் இனி நம்மைச் சார்ந்தது. இதை எங்கும் முரசறைந்து சொல்லுவாய்!” எறு தம்பிக்குக் கட்டளை இடுகிறான். ”
இந்த சந்தர்ப்பத்தில் வஞ்சகச் சகுனி நல்லவன் போல நியாயம் பேசுகிறான். “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?” என்று கடிந்து கொண்டு விட்டுச் சொல்லுவான்:
“மின்னும் அமுதமும் போன்றவள்-இவர் மேவிடு தேவியை வைத்திட்டால்-அவள் துன்னும் அதிட்டம் உடையவள்-இவர் தோற்றதனைத்தையும் மீட்டலாம்!”
இது கேட்டு துரியோனனுக்குப் பெரு மகிழ்ச்சி. தேன் கலசத்தினை எண்ணி நாய் வெறு நாவினை எச்சில் ஊறச் சுவைத்து மகிழ்வது போல !
தருமன் பாஞ்சாலியைப் பணயம் வைக்கிறான்; இழக்கிறான்!
இது குறித்து கெளரவர் கொண்ட மகிழ்ச்சி பாரதியின் வார்த்தைகளிலேயே:
திக்குக் குலுங்கிடவே-எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல்லாம்! தக்குத்தக்கென்றேஅவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள் கொட்டுவார்! ஒக்கும் தருமனுக்கே-இஃதென்பரோ! ஒ!வென்றிறைந்திடுவார், குக்குக்கென்றே நகைப்பார்-’துரியோதனா கட்டிக்கொள் எம்மை’ என்பார்.”’
அவர்களின் ஆர்ப்பாட்டத்தை விவரிக்க இதற்கு மேலும் தன்னிடம் வார்த்தை இல்லை என்கிறான் பாரதி!
துரியோதனன் விதுரனை அழைத்து திரௌபதியை தன் அவைக்கு அழைத்து வரச் சொல்கிறான். என்ன ஆணவம்!
இந்த சந்தர்ப்பத்திலும் விதுரன் நீதி சொல்ல முனைகிறான்
“ ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய், தெய்வத் தவத்தியை சீர்குலையப் பேசுகிறாய்; நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாம் சொல்லுகிறேன்! என்னுடைய சொல் வேறெவர் பொருட்டும் இல்லையடா! பாண்டவர் தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார். மாண்டு தரைமேல் மகனே, கிடப்பாய் நீ” என்கிறான்.
‘ஆண்டவரே! நாங்கள் அறியாமையால் செய்த நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர்” என்று கேட்டுக் கொள்ளச் சொல்கிறான்.
நன்றாய்க் கேட்பானே துரியோதனன்!
“சீச்சீ, மடையா, கெடுக!” என்று சிற்றப்பாவை சபித்து விட்டு தேர்ப்பாகனை இந்தப் பணிக்கு அனுப்புகிறான். தேர்ப்பாகனிடம் பாஞ்சாலி பேசுவது அக்கினி புத்திரியின் உரிமைக் குரல். பரதப் புதுமைப் பெண்ணின் புரட்சிக் குரல்! மனித உரிமை, பெண்ணுரிமை இவற்றின் முதல் முழக்கம்.
“நல்லது; நீ சென்று நடந்த கதை கேட்டு வா, வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்னம் இழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில் இச் செய்தி தெரிந்து வா!”
என்று அனுப்பிய பின்னும் மனம் பதைத்து அமர்ந்திருக்கிறாள்.
தேர்ப்பாகன் இந்தச் செய்தியை சென்று துரியோதனனிடம் சொல்கிறான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டவர்கள் நொந்து போய் ஒன்றும் நுவலாது இருந்து விட்டார்கள்.
துரியோதனன் பேசுவான்! என்ன பேசுவான்?
[b] | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம் (7)(8) Sun Apr 18, 2010 7:10 am | |
| பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
"இதென்னடா வல்லடி வழக்காய் இருக்கிறது?" என்று யோசிக்கிறான் துரியோதனன். "அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வந்து இங்கு நிற்கிறாய்; பிள்ளைகள் போலக் கதைகள் பேசுகிறாய்!" என்று தேர்ப்பாகனைக் கடிந்து கொண்டு விட்டுத் தொடர்கிறான். "எல்லாக் கேள்வியையும் கேட்கட்டும்; சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லட்டும்; சம்மன் அனுப்பி ஆகி விட்டது; கோர்ட்டில் ஆஜர் ஆகிப் பேசிக் கொள்ளட்டும்!" என்ற தோரணையில் பேசுகிறான்.
"வேண்டிய கேள்விகள் கேட்கலாம்-சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம்-மன்னர் நீண்ட பெரும் சபைதன்னிலே-அவள் நேரிடவே வந்த பின்புதான் –சிறு கூண்டிற் பறவையும் அல்லளே?-ஐவர் கூட்டு மனைவிக்கு நாணமேன்?-சினம் மூண்டு கடுஞ்செயல் செய்குமுன் -அந்த மொய்குழலாளை இங்கு இட்டு வா!".
"அவளை அழைச்சிட்டு வரலைனா உன்னைச் சின்னாபின்னமா ஆக்கிடுவேன்" என்கிறான்.
மீண்டும் போகிறான் தேர்ப்பாகன். திரெளபதி தன் கட்சியைச் சொல்லி வாதிடுகிறாள்.
"நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத் தாயத்திலே விலைப் பட்டபின் என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்?"
"அவரே அடிமை. அவர் மற்றொருவரைப் பணயம் வைக்க என்ன உரிமை இருக்கிறது? அவருக்கு மனைவி கிடையாது. என்னைப் பொறுத்த வரையில் என் நிலை நான் துருபதன் மன்னன் மகள் என்பதுதான்!"
"அடேங்கப்பா! இவள் கேட்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாவிட்டால் நான் மறுபடியும் இவள் கிட்ட வந்து மாட்டிக்க மாட்டேம்ப்பா! அவன் என்னைக் கொன்றே போட்டாலும் போடட்டும்!" என்று எண்ணியபடி, மீண்டும் சபைக்குச் சென்று நடந்ததைக் கூறுகிறான் தேர்ப்பாகன்.
"எத்தனை தடவை சென்று கேட்டாலும் அவள் இதையேதான் சொல்லுவாள்! நீங்க சொல்றதைப் போய்ச் சொல்லறேன்; அவள் வரல்லைனா நான் என்ன செய்வேன்?" என்கிறான்.
துரியோதனன், தம்பி துச்சாதனனைஅனுப்பி வைக்கிறான். துச்சாதனன் எப்படிப் பட்டவன்? "தீமையில் அண்ணனை வென்றவன்; கல்வி எள்ளளவேனும் இல்லாதவன்; கள்ளும், ஈரக் கறியும் விரும்புவோன்; புத்தி விவேகம் இல்லாதவன்; அண்ணன் எது சொல்லினும் மறுக்கிலான்."
இவன் திரெளபதியிடம் சென்று, தீமொழிகள் பேசி அவளை அழைக்கிறான். அவள் சொல்கிறாள்:
"கேள்! மாதவிலக்காதலால் ஓராடைதன்னில் இருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபை முன் என்னை அழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே, சோதரர் தம் தேவியினைச் சூதில் வசமாக்கி, ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல் மன்னர் குலத்து மரபோ? அண்ணன்பால் என் நிலைமை கூறிடுவாய்; ஏகுக!" என்கிறாள். எதுவும் கொடியவன் செவியில் ஏறவில்லை. கக்கக்க.. என்று கனைத்து அருகில் வந்து பாஞ்சாலி கூந்தலினைக் கையினால் பற்றிக் தர தர என்று இழுக்கிறான்.
"தாய் பிறன் கைபடச் சகிப்பவனாகி வாழும் வாழ்க்கை நாய்ப் பிழைப்பு" என்று சத்ரபதி சிவாஜியாக முழங்கிய பாரதி, வழி நெடுக இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்த மக்களைப் பார்த்துக் காறி உமிழ்கிறான். சுதந்திரப் போரைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தங்கள் குடும்பம் தங்கள் வேலை என்று இருந்தவர்களுக்கு சூடு கொடுக்கிறான் போலும்!
"ஊர்மக்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து, தரையில் கிடத்திவிட்டு, இந்த தங்கமான பெண்ணை அவள் அந்தப்புரத்தில் சேர்த்திருக்க வேண்டாமா? வீரமில்லா நாய்கள்!" அவர்கள், "என்ன கொடுமை இது?" என்று தங்களுக்குள் பேசியபடி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். நெட்டை மரங்கள் என நின்று புலம்பினர். "பெட்டைப் புலம்பலினால் பிறருக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா?" என்று சவுக்கடி கொடுக்கிறான் பாரதி.
துரியோதனன் சபையில் இழுத்து வந்து நிறுத்தப்படுகிறாள் பாஞ்சாலி. அதன் பின் நடந்தது என்ன?
************************************************************************************************************************************************************************************************
பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
துரியோதனன் சபைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி கணவர்களைப் பார்த்துக் கேட்கிறாள், "இதற்கா அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?" (ஒருத்தருக்கு அஞ்சு பேர்!) விஜயனும் பீமனும் குன்றா மணித் தோளைப் பார்த்துக் குனிந்து கொள்கிறார்கள். தருமனும் தலை கவிழ்கிறான். "இந்த சபையில் கற்று கேட்டுணர்ந்த சான்றோர்கள், வேள்வி, தவங்கள் புரிந்த வேதியர்கள் இருக்கின்றனர். 'நிறுத்துடா' என்று உன்னை யாரும் சொல்லவில்லையே?" என்று புலம்பி அழுது, 'மின் செய் கதிர்விழியால்' பாண்டவரைப் பார்த்து வெந்நோக்கு வீசுகிறாள். அவர்களுக்குப் பேச வாயில்லை. துரியோதனன்தான், "நீ தாதியடி, தாதி!" என்று சொல்கிறான். கர்ணன் சிரித்திட்டான். சகுனி புகழ்ந்தான். சபையோர்? என்று சொல்லி பாரதி கேள்விக் குறி போடுகிறான். அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களோ என்று நம்மை சஸ்பென்ஸில் வைத்து விட்டு அவனே போட்டு உடைக்கிறான் : "வீற்றிருந்தார்!"
"தகுதி உயர்(?) பீஷ்மன்தான் பேசுகிறான். ஒருவரின் வாதத்தைச் சொல்லி அதற்கு பதில் சொல்வது வாதுகளில் மரபு. அந்த வகையில் பீஷ்மன் சொல்கிறான் பாஞ்சாலி, நீ என்ன சொல்கிறாய்? யுதிஷ்டிரன் உன்னை சூதில் பணயமாக வைத்தது தப்பு என்கிறாய்; தோற்றது செல்லாது என்கிறாய்.. அவ்வளவுதானே? உன்னுடைய இந்த வாதத்துக்கு நான் பதில் சொல்றேன், கேளு!" என்று சொல்லி விட்டு தொடர்கிறான்.
"................பண்டை யுக வேத முனிவர் விதிப்படி, நீ சொல்லுவது நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தி அது. ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில் பேணி வந்தார். பின் நாளில் இஃது பெயர்ந்து போய் இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம். தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம். தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் நின்னை அடிமை எனக் கொள்வதற்கு நீதி உண்டு!"
"இது ரொம்பக் கொடுமைதான், அநீதிதான். என்றாலும், சட்டம் சொல்வது என்ன, வழக்கம் என்னன்னு கேட்கப்படுவதாலே நான் சொல்கிறேன்! சட்டப்படிதானே தீர்ப்பு சொல்ல முடியும்! பழைய சட்டத்துக்கெல்லாம் மாற்று விதிகள் வந்துவிட்டனவே!" என்று பேசுகிறான். கடைசியாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான், "தீங்கு தடுக்கும் திறம் இல்லேன்!" இப்படிச் சொல்லித் தலை கவிழ்ந்து கொள்கிறான்.
இதற்கு பாஞ்சாலி சொல்லும் எள்ளலும் வேதனையும் நிறைந்த பதிலை பாரதியின் வரிகளில்தான் கேட்க வேண்டும்.
"சால நன்கு கூறினீர்! ஐயா,தரும நெறி! பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் கொண்டு ஓர் வனத்திடையே வைத்துப் பின்,கூட்டமுற மந்திரிகள், சாத்திரிமார் தம்மை வரவழைத்தே செந்திருவைப் பற்றி வந்த செய்தி உரைத்திடுங்கால் "தக்கது நீர் செய்தீர்,தருமத்துக்கு இச்செய்கை ஒக்கும்" என்று கூறி உகந்தனராம் சாத்திரிமார்! பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!"
இப்படி படபட வென்று பேசிய பின்னும் சபையினரின் நல்லியல்புக்கு ஓர் அழைப்பும் விடுக்கிறாள்.
"பெண்டிர் தமை உடையீர், பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவம் அன்றோ? பெரிய வசை கொள்வீரோ? கண் பார்க்க வேண்டும்!" என்று கை எடுத்துக் கும்பிட்டாள்.
பேசி முடித்து விட்டு அம்பு பட்ட மான் போல் அழுது, துடிதுடிக்கிறாள். தொடர்கிறது சொற்சித்திரம்.
"ஆடை குலைவுற்று நிற்கிறாள்!-அவள் ஆவென்றழுது துடிக்கிறாள்!-வெறும் மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான்- இந்தப் பீடையை நோக்கினன் வீமனும்-கரை மீறி எழுந்தது வெஞ்சினம்-துயர் கூடித் தருமனை நோக்கியே-அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?"
[b] | |
| | | Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: பாஞ்சாலி சபதம்( 9) (10) Sun Apr 18, 2010 7:13 am | |
| எரிதழல் கொண்டு வா!
பெண்ணடிமைத்தனம் இடைக்காலத்தில் தோன்றிய வழக்கே தவிர, வேத நெறிப்படியானது இல்லை என்பதைப் பாரதி பதிவு செய்து விட்டான். கற்றுணர்ந்த பெரியவர்களும் தீமை நடக்கும்போது கையைப் பிசைந்து கொண்டு தீங்கு தடுக்கும் திறம் இல்லை என்று புலம்புவதையும் காட்டுகிறான். ஆட்சியாளர்களின் மனப்போக்குக்கு ஏற்பவே சட்டங்களும் நீதி சொல்பவரும் வளைந்து கொடுக்கிறார்கள் என்ற அவலத்தையும் சுட்டிக் காட்டி விட்டான்.
இந்த நெருக்கடி தருணம் வரை, சரியோ தவறோ, அண்ணன் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொண்டிருந்த பீமன் இப்போது முடிவுகளுக்கு தான் சம்பந்தப்படாதது போலப் பேசுகிறான். Blame Game. பழி சுமத்தும் விளையாட்டு.
"சூதர் மனைகளிலே-அண்ணே! தொண்டு மகளிர் உண்டு, சூதிற் பணயம் என்றே-அங்கோர் தொண்டச்சி போவதில்லை. ஏது கருதி வைத்தாய்?-அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குல விள்க்கை-அன்பே வாய்ந்த வடிவழகை
.......
சக்கரவர்த்தி என்றே-மேலாம் த்ன்மை படைத்திருந்தோம்; பொக்கென ஓர் கணத்தே-எல்லாம் போகத் தொலைத்து விட்டாய்! நாட்டை எல்லாம் தொலைத்தாய்-அண்ணே! நாங்கள் பொறுத்திருந்தோம். மீட்டும் எமை அடிமை-செய்தாய், மேலும் பொறுத்திருந்தோம்! துருபதன் மகளைத்-திட்டத் துய்மன் உடன்பிறப்பை, இரு பகடை என்றாய்-ஐயோ! இவர்க்கடிமை என்றாய்! இது பொறுப்பதில்லை-தம்பி! எரி தழல் கொண்டு வா! கதிரை வைத்திழந்தான்- அண்ணன் கையை எரித்திடுவோம்!"
ஒரு வேளை தருமன் பாஞ்சாலியை வைத்து வென்று, தோற்றது அனைத்தையும் மீட்டிருந்தால், பீமனுக்கு இந்த தர்ம ஆவேசம் வந்திருக்குமா என்று நினைக்கத் தோன்றுகிறது! தேர்தலில் கட்சி வென்றால் அவரவர் தன்னால்தான் என்று பெருமை பீற்றிக்கொள்வது, தோல்வி ஏற்பட்டால், ஒருவன் தலையைப் போட்டு உருட்டுவது என்பதற்கான அடிப்படை மனோபாவம் அன்று தொட்டு இருந்திருக்கிறது!
அருச்சுனன் சமாதானப்படுத்துகிறான். "கோபத்தினால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாய். யார் முன்னால் இப்படிப் பேசுகிறோம் என்று யோசித்தாயா?" என்று சொல்லி விட்டு தொடர்கிறான். "எல்லாம் நல்லதுக்குத்தான்" என்ற ரீதியில்.
விதி உலகத்துக்கு நம்மால் ஒரு பாடம் புகட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியை அமைத்திருக்கிறான்!
"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்"எனும் இயற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
தொடர்கிறான்:
'கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்.காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம், தனு உண்டு காண்டீவம் அதன் பேர்' என்றான்.
சபையில் நிகழும் அநீதி பொறுக்காமல் விகர்ணன் எழுகிறான். "பாஞ்சாலி கேட்பது நியாயம்தானே?" என்கிறான். கூடி இருந்த மன்னர்களிடம், "இது தகுமா?" என்று முறையிடுகிறான். அவையில் ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுகிறது.
"இது அடுக்காது. உலகு இந்தக் கொடுமையை மறக்காது. போர்க்களத்தில்தான் இந்தப் பழி தீரப்போகிறது" என்று சில மன்னர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
சபையை அலட்சியம் செய்து, விகர்ணனுக்கு தனக்கே உரிய முறையில் பதில் கொடுத்து விட்டு பணியாளை அழைத்து பாஞ்சாலியின் உடையைக் களைய உத்தரவிடுகிறான் துரியோதனன்.
************************************************************************************************************************************************************************************************
நாமும் கதையை முடித்தோம்!
பணியாட்கள் ஏன்? துச்சாதனனே இந்தப் பணியில் இறங்குகிறான். "அச்சோ, தேவர்களே!" என்று அலறி விதுரன் மயங்கி வீழ்கிறான். திரெளபதி "Inner Self" உடன் ஒன்றிப் போய் உலகை மறந்து நிற்கிறாள் "ஹரி, ஹரி, ஹரி" என்கிறாள். "கண்ணா, அபயம் அபயம், அபயம் எனக்கு" என்கிறாள். கண்ணனின் புகழை எல்லாம், மெய்மறந்து பாடுகிறாள்
நிறைவாக அவள், வையகம் காத்திடுவாய்!கண்ணா! மணிவண்ணா! என் மனச்சுடரே! ஐய நின்பத மலரே-சரண் ஹரி,ஹரி,ஹரி-என்றாள்!
என்ன ஆயிற்று அந்தக் கணமே?
கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் - அவை வளர்ந்தன, வளர்ந்தன வளர்ந்தனவே!
எது போல?
பொய்யர் தம் துயரினைப் போல்! தையலர் கருணையைப் போல்! பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்தப் பெரு மக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்!
துன்னிய துகிற் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்து விட்டான்!
தேவர்கள் பூச்சொரிந்தார்! –ஓம் ஜெய ஜெய பாரத சக்தி என்றே! ஆவலோடெழுந்து நின்று-முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான்! சாவடி மறவர் எல்லாம் –ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம் குவித்தார் காவலின் நெறி பிழைத்தான் -கொடி கடி அரவு உடையவன் தலை கவிழ்ந்தான்!
பீமன் துரியோதனனையும் துச்சாததனனையும் பழி வாங்கச் சபதம் செய்கிறான். அர்ச்சுனன் சபதம் இது:
பார்த்தன் எழுந்துரை செய்வான் - இந்தப் பாதகக் கன்னனைப் போரில் மடிப்பேன், தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு- எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை; கார்த்தடங்கண்ணி எம் தேவி-அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை; போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்-ஹே! பூதலமே அந்தப் போதினில் என்றான்!
பாஞ்சாலியின் சபதம் இது:
தேவி திரெளபதி சொல்வாள்-ஓ தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டும் கலந்து-குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் –இது செய்யுமுன்னே முடியேன் என்று உரைத்தாள்!
பாரதி, காவியத்தை இவ்வாறு நிறைவு செய்கிறான்:
ஓமென்றுரைத்தனர் தேவர்-ஓம் ஓமென்று உறுமிற்று வானம்! பூமி அதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை பூழிப் படுத்தியதாம் சுழற்காற்று சாமி தருமன் புவிக்கே-என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் நாமும் கதையை முடித்தோம்-இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க!
பின்னுரை: அருச்சுனன் பாஞ்சாலிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு சினந்து சீறினான். பழி வாங்குவதாக சபதம் செய்தான். எதன் மீது? கண்ணன் கழல் மீது; மற்றும் காண்டிவத்தின் மீது. போர்த்தொழில் விந்தைகளை இந்தப் பூதலமே காணும் என்று உறுதிபட உரைத்தான். இந்த உறுதியெல்லாம் போர்க்களம் புகுந்ததும் என்ன ஆயிற்று? எந்தக் காண்டிவத்தின் மீது ஆணையிட்டானோ, அதுவே கை நழுவிப் போக, போரிட மாட்டேன் என்று கலங்கி நிற்க, யார் மீது ஆணையிட்டானோ அந்தக் கண்ணனே அவனுக்கு தர்மத்தையும் கடமையையும் உபதேசிக்க.. இதில் "வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க யாதேனும் சற்றே இடம்" இருக்கிறதோ?
(நிறைவுற்றது)[b] | |
| | | Sponsored content
| Subject: Re: பாஞ்சாலி சபதம் (1) | |
| |
| | | | பாஞ்சாலி சபதம் (1) | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |