ஒரு சில நிறுவனங்களுக்கு இதன் உற்பத்தி உரிமைகளை காப்புரிமை பெற்ற நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான உரிமம் பெற ஒரு பெரிய தொகையை அளிக்கவேண்டும். இதனால் அதுவும் பயனில்லாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்லது மருந்து அது தேவைப்படும் அளவிற்கு கிடைக்காமல் போக வாய்புள்ளது.
ஆனால் இந்த பொதுச் சுகாதார நெருக்கடி எது என்பதை உலக சுகாதார அமைப்பே தீர்மானிக்கும். இது போதாதா? ஸ்வைன் ஃப்ளூ பரவல் நெருக்கடி நிலைக்கு உயரவில்லை என்று கூறிக்கொண்டே காலம் கடத்தலாம்.
ஏன் காப்புரிமை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறீர்கள் என்று அந்த நிறுவனங்களிடம் கேட்டால், 'நாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, ஏகப்பட்ட உயிர்காப்ப்பு மருந்துகளுக்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம், அவற்றிற்கு ஆகும் செலவு பயங்கரமானது, எனவே நாங்கள் இதிலிருந்து வரும் வருவாயை மீண்டும் ஆய்விற்குத்தான் பயன்படுத்துகிறோம், நிறைய ஆய்வுகள் சந்தைக்கு கொண்டு செல்லும் மருந்துகளாக முடிவதில்லை. இது ஒரு மிகப்பெரிய நடைமுறை அதிகம் செலவாகும்' என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் மருந்துவ இதழில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது பற்றி முழு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் பட்ஜெட்டில் 12 முதல் 14 விழுக்காடு வரையே புதிய மருந்து ஆய்விற்கு செலவிடப்படுகிறது, அதுவும் ஆய்வு நடத்துவது வேறு சிலர். அந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் சென்று ஒரு குறைந்த அளவில் செலவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வுகளெல்லாம் ஏற்கனவே உள்ள சாதாரண மருந்துகளில் புதிதாக ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் பயனற்றவை என்று கூறி முழு காப்புரிமையை தன் இந்த புதிய மருந்திற்கு பெறுவதே என்ற அதிரடி உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.
இதனால் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக அழிக்கும் எந்த ஒரு நோய்க்கான தீவிர ஆராய்ச்சியையும் சீரியசாக எந்த பன்னாட்டு நிறுவனங்களும் செய்வதில்லை. மலேரியாவிற்கு என்னவெல்லாமோ மருந்துகள் கண்டுபிடித்தும் இன்றும் அது ஒரு உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மலேரியா நோய்க்கான மருந்தை விற்று வரும் நிறுவனங்கள் எவ்வளவு லாபம் பார்த்திருக்கும். ஆனால் மலேரியாவை ஒழிக்க அதில் ஒரு சில விழுக்கட்டுத் தொகையினைக்கூட செலவிடுவதில்லை என்பதுதான் இன்றைய இருண்ட உண்மை.
அமெரிக்காவில் இதனை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. கட்சிகளுக்கு மருந்து நிறுவனங்கள் பெரிய அளவிற்கு நிதி கொடுக்கின்றன. அவர்களது தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் கடைசியாக அமல் செய்யப்பட்ட சுகாதார மசோதா 2003ஆம் ஆண்டு. இதனை பெரிதும் வடிவமைத்தவர்கள் மருந்து உற்பத்தி நிறுவன ஆதரவாளர்களே என்று குடியரசுக் கட்சியின் உறுப்பினர் வால்டர் பர்ட்டன் என்பவர் கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு அழுகிபோன அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை சிறிதும் மாறிவிடக்கூடாது என்பதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக இருந்து வருகின்றன.
மனித சமூகத்தின் ஆரோக்கியமும், உடல் நலமும் பெரிதல்ல, மருந்து நிறுவனங்களின் ஆரோக்கியமும், நிதி நிலையுமே முக்கியம். எப்போது மாறப்போகிறதோ உலகளாவிய இந்த இழி நிலை?