புயல் அல்லது புயல் காற்று என்பது கடுமையான வேகத்தில் காற்று வீசுவதாகும். மணிக்கு 100 முதல் 250 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நில உலகைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் (காற்று மண்டலத்தில்) சூரியனுடைய வெப்பத்தால் ஓரிடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்தும், மற்றோர் இடத்தில் காற்றின் அழுத்தம் கூடியும் இருக்கும். இந்த காற்றழுத்த வேறுபாட்டால் காற்று ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு வீசும் (அதிக அழுத்தம் உள்ள இடத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்கு வீசும்). எனவே புயல் வீசும் பகுதி குறைந்த அழுத்தமுள்ள பகுதி.
இந்த புயல் காற்றில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. புயல் காற்றைத் தமிழில் பொதுவாக பல சொற்களால் குறிப்பிடுகிறோம். கடுவளி, சூறாவளி, சூறாவாரி, பெருங்காற்று, பெருவளி, சித்திரைச்சுழி, சுழற்காற்று என்பன அவற்றுள் சில. இவற்றுள் சித்திரை மாதம் தென் இந்தியாவில் ஏற்படும் சுழற்காற்றை சித்திரைச்சுழி என்பார்கள். சுழி, சுழல் என்னும் சொற்கள் தெளிவாக சுழன்றடிக்கும் காற்றை சுட்டுகின்றது. பெரும்பாலும் பெருங்காற்று வீசும் பொழுது, மழையும் இடியும் இருப்பது இயல்பு. சுழற்காற்று அடிக்கையில், சுழற்சிக்கு நடுவே அதிக காற்று வீசாமல் அமைதியாய் இருக்கும் ஒரு பகுதி உண்டு, இதனை புயலின் கண் என்பர். இந்த புயற்கண் சுமார் 30-40 கி.மீ விட்டம் உள்ள நிலப்பகுதியாய் இருக்கும். இந்த புயற்கண்ணைச் சுற்றி மேகச் சுவர் ஒன்று உண்டு. இப்பகுதியில் தான் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். பெரும் பாலும் புயல் காற்று கடலில் ஒரு பகுதியில் உண்டாகி, நகர்ந்து நிலப்பகுதியை அடைந்து பெரும் சேதத்தை (அழிவை) உண்டாக்குகிறது. பலரும் உயிரிழக்கவும் நேரிடுகிறது. செயற்கைத் துணைக்கோள்கள் இருப்பதால், புயல் உருவாவதைக் கண்டு முன் எச்சரிக்கையாய் உணரமுடிகின்றது. இப்பக்கத்தில் உள்ள படத்தில், புயல் காற்று உருவாவதை, அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து எடுத்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்