வீடு புகுந்து கொள்ளையடிப்பது... கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வது போன்ற நேரடி முரட்டு ஆசாமிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல - 'ஒயிட் காலர்' கிரிமினல்கள்! புத்தியையே கத்தியாக்கும் இப்படிப்பட்ட ஒரு கில்லாடிக் கொள்ளையனைப் பார்த்து அசந்துபோய் இருக்கிறார்கள் மதுரை போலீஸார்!
அவன் பெயர் பாலாஜி; இணைய தளத்தில் நண்பர் களைத் தேடிப் பிடிக்கும் 'ஃபேஸ் புக்'கில் இவன் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் 'பன்னி' (முயல் என்று அர்த்தம்!) பாலாஜி; பெங்களூருவில் சுகேஷ்; கேரளாவில் மகேஷ்... இன்னும் நிறைய இடங்களில் எத்தனை பேர்களோ! எப்போதும் கோட்-சூட், நுனிநாக்கு ஆங்கிலம் என 'கஜினி' பட சஞ்சய் ராமசாமி ஸ்டைலில் வலம் வருவது இவனது வழக்கம். அப்படி கடந்த வாரம், மதுரை வந்த இவன் சினிமா தியேட்டர் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மேனேஜரிடம், ''உங்கள் தியேட்டரில் சரியான சவுண்ட் எஃபெக்ட் இல்லையே... சேட்டிலைட்டில் இருந்து கன்ட்ரோல் செய்யும் மைக்ரோ டிஜிட்டல் சவுண்ட் எஃபெக்ட் சாதனங்களை நான் உங்கள் தியேட்டரில் பொருத்திக் கொடுக்கவா?'' என்று இங்கிலீஷில் அளந்துவிட்டிருக்கிறான்.
இதை அப்படியே நம்பிய மேனேஜரும், சுளையாக 10 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து ஜோராக வழியனுப்பி இருக்கிறார். இதை, மேனேஜர் தியேட்டர் முதலாளியிடம் பெருமையாக சொல்ல... அவருக்கோ ஒரு சந்தேகம்! உடனே அவன் தந்த காஸ்ட்லி விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணுக்கு போன் அடிக்க... அந்த எண் உபயோகத்திலேயே இல்லை! இந்த விவகாரம் புகாராக வந்து சேர்ந்ததுமே சுதாரித்த மதுரை போலீஸ், கூலிங் கிளாஸும் சுருட்டு மாக பில்லா கெட்-அப்பில் ஏர்போர்ட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அவனை சூப்பராக மடக்கியது. அவனிடம் இருந்து லேப்-டாப், காஸ்ட்லி மொபைல் போன்கள், ஏகப்பட்ட கிரெடிட், டெபிட் கார்டுகள், 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவனிடம் நடந்த விசாரணைப் படலத்தை நம்மிடம் ஆச்சர்யத்துடன் பகிர்ந்தனர்.
''பையனுக்கு 22 வயசுதான். ஹிந்தி சினிமா ஸ்டார் கணக்கா அம்சமா இருக்கான். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு பல மொழிகள்ல வித்தகன். சிக்குனதுமே எங்ககிட்ட ரொம்ப கூலா, 'என்னை யாருன்னு தெரியாம இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க. எனக்கு சவுத் ஆப்பிரிக்காவுல எத்தனை மைன்ஸ், துபாயில் எத்தனை எண்ணெய் கிணறு இருக்கு தெரியுமா..? இன்னும் கொஞ்சநேரத்துல பி.எம். ஆபீஸில் இருந்து உங்களுக்கு போன் வரப்போகுது. அதுக்குள் ஒழுங்கா என்னை ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டீங்கன்னா, உங்க புரமோஷனுக்கு நான் கியாரண்டி'னு சொன்னான். எத் தனையோ கேடிகளைப் பார்த்த எங்களுக்கே ஒரு நிமிஷம் டர்ராகிடுச்சு. அப்புறம், எங்க ஏ.டி.எஸ்.பி. வந்து 'நல்ல'விதமா கவனிச்சப்புறம்தான் வழிக்கே வந்தான்...'' என்றார்கள்.
ஏ.டி.எஸ்.பி-யான மயில்வாகனன் நம்மிடம், ''இப்ப வரைக்கும் அவன் எங்ககிட்ட வாயே திறக்கலை. மாத்தி மாத்தி கேள்வி கேட்டு விசாரிச்சாலும்... வடிவேலுவையே மிஞ்சுற அளவுக்கு சொல்றான். அவனது ஃபேஸ் புக், இ-மெயில் எல்லாத்தையும் செக் பண்ணித்தான் அவனைப் பத்தி விவரம் தெரிஞ்சது. இவன் சொந்த ஊர் பெங்களூரு. பேர் நாகர் ரவி. அப்பா சந்திரசேகர் சாதாரண கார் புரோக்கர். அவர் போன்ல பேசினா, 'என் பையன் வீட்டை விட்டுப்போய் நாலு வருஷமாச்சு. மும்பையில இருக்கேன். மலேசியாவுல இருக்கேன். பெரிய தொழிலதிபராகிட்டேன்னு அப்பப்ப போன் பண்ணுவான். அவ்வளவுதான்... அவனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'னுட்டார். நாகர் ரவியின் ஃபேஸ் புக்ல இவனுக்குச் சொந்தமா மினி ஃப்ளைட், ஹெலிகாப்டர் இதெல்லாம் இருக்கிறதா குறிப்பிட்டு போட்டோக்களையும் வெளியிட்டு இருக்கான்!
மெல்போர்ன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. படிச்சதாவும் ஸ்ரீ குரூப்ஸின் மேனேஜிங் டைரக்டர்னும் தன்னை அந்த ஃபேஸ் புக்ல அறிமுகப்படுத்தி இருக்கான். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட 'ஸ்ரீ குரூப்ஸு'க்கு சென்னை, துபாய், ஆஸ்திரேலியா, வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் கிளைகள் இருக்குதாம்! அது உலக ரப்பர் மார்கெட்டையும் நிலக்கரி மார்க்கெட்டையும் கன்ட்ரோல் செய்ற முக்கிய கம்பெனின்னு பீலா விட்டிருந்தான். ஆனா அவன் தொழிலே ஃப்ராடு பண்றது மட்டும்தான்! வெளிநாட்டிலிருந்து பி.எம்.டபிள்யூ., ஹம்மர், பென்ஸ் கார்களைக் குறைஞ்ச விலைக்கு வாங்கித் தர்றதா பெரிய பெரிய தொழிலதிபர்கள்கிட்ட சொல்லி லட்சக்கணக்கில் பணம் கறக்குறதும் அவன் பாணி.
அதேமாதிரி, பி.எம்.டபிள்யூ கம்பெனியில் இருந்து, 'நீங்கள் அனுப்பிய 50 லட்சத்தைப் பெற்றுக்கொண்டோம்'னு போலியா இவனே பொய் ஆதாரமா இவனுக்கு மெயில் அனுப்பி இருந்ததையும் கண்டுபிடிச்சோம். அதுபோல, மலேசியா தூதர் இவனுக்கு, 'நீங்கள் எனக்கு சவுத் ஆப்பிரிக்காவில் விசா நீட்டிப்பு பண்ணிக் கொடுத்ததற்கு நன்றி'னு மெயில் அனுப்பிருக்கிறார். எல்லாமே டுபாகூர்தான்! இதுதவிர, தான் எடுக்கப்போகிற சினிமா படத்தில் நடிகையாக்குறேன்னு சொல்லியும் சென்னையில் நிறைய பொண்ணுங்க கிட்ட வசூல் பண்ணி இருக்கான். வளரும் நடிகர், நடிகைகள் சிலர் கூட இவனுக் குத் தொடர்பு இருக்கிறதை மெயிலில் கண்டுபிடிச்சிருக்கோம். சென்னை ஹாரிங்டன் ரோட்டில் இருக்கிற அபார்ட்மென்ட்ல மாசம் 50 ஆயிரம் வாடகையில் குடியிருக்கிறான்...'' என்று அடுக்கிக்கொண்டே போன ஏ.டி.எஸ்.பி.,
''இந்தியாவில் உள்ள அத்தனை ஸ்டார் ஹோட்டலிலும் தங்கியிருக்கிறதா சொல்றான். சாதாரணமா டின்னர் சாப்பிட்டாலே 50 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணுவானாம். லட்சம் ரூபாய்க்கு கோட்-சூட் எடுத்திருக்கான்னா பாருங்களேன். ஆனா, இவன் இப்படி பீலா விட்டே கோடிக்கணக்குல மோசடி செஞ்சிருந்தாலும் எதிர்காலத்துக்குன்னு எதையும் சேர்த்து வெச்சுக்கலை. அன்னன்னிக்கு தாராளமா செலவு செஞ்சிருக்கான். அவனுடைய சென்னை அபார்ட்மென்ட்ல இருந்து ஒரு பென்ஸ் கார், இரண்டு லேப்-டாப்புகள் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைகெடிகாரங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியிருக்கிறோம். அவனிடம், 'ஏண்டா பணத்தைச் சேர்த்து வெச்சுக்கலை?'னு கேட்டா, 'எதுக்கு சார் மடியில் கனம்..? இப்ப என்னை வெளியில விட்டு பாருங்க. ஒரு மணி நேரத்துல ஒரு லட்சம் சம்பாதிச்சிட்டு(!) வர்றேன்'னு சவால் விடுறான்...'' என்றபோது நமக்கு தலை தட்டாமாலையாகச் சுற்றியது!