தனியார் நிறுவனம் ஒன்று காரைக்கால் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க புதுச்சேரி அரசை அணுகியுள்ளது என்றும் இது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் முதலமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2010-11 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறையை கவனிக்கும் முதலமைச்சர் வைத்திலிங்கம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அதில், ''வரும் ஆண்டில் சுற்றுலா சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு பணிகள் பல முடிவுபெறும் அல்லது தொடங்கப்படும். சுற்றுலா அமைச்சகத்தின் நிதியுதவியுடன், INTACH மூலம், காரைக்கால் சுற்றுச்சூழல் கடற்கரையை அழகுபடுத்தும் பணி (இரண்டாம் கட்டம்) மேற்கொள்ளப்படும். அண்மையில் முதல்கட்டப் பணி முடிவடைந்துவிட்டது.
புதுச்சேரி கடற்கரையை அழகுபடுத்தும் பணி இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவுபெறும். திருநள்ளார் கோவில் நகரத்திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து, முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தனியார் நிறுவனம் ஒன்று காரைக்கால் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க புதுச்சேரி அரசை அணுகியுள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளது. காரைக்கால் - பேரளம் இரயில் பாதையை, அகல பாதையாக மாற்ற இரயில்வே அமைச்சகத்திடம் தொடர்பு கொள்ளப்படும்.
புதுச்சேரியில் தனியார் விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விமான எரிபொருள்மீது ஒரு விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில், சில குறிப்பிட்ட இடங்களில், தனியார் பங்களிப்புடன், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி இறுதி செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.