மனித உடலில் மூளைதான் ‘தலைமைச் செயலகம்’. மூளைதான் நமது உடலின் எல்லா இயக்கங்களுக்கும், உணர்வுகளுக்கும் காரணமாக உள்ளது. மூளையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மனிதனின் செயல்பாட்டிலும் அதன் விளைவு தெரியும். மூளையில் ஏற்படும் பாதிப்பு சில சமயங்களில் உடலில் விபரீதமான மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.
அப்படி ஒரு மாற்றம்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 63 வயதான மால்கம் மியாட் என்பவருக்கு ஏற்பட்டு உள்ளது. மியாட்டுக்கு, கடந்த 2004–ம் ஆண்டு ஒரு நாள் திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. இந்த வலிப்பு நோயின் காரணமாக, அவரது மூளையில் உணர்வுகளை கட்டுப்படுத்தும் பகுதியில் பெரும் பாதிப்பு உண்டானது. இதனால் சோகம், வருத்தம், துயரம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தகுதியை அவர் இழந்து விட்டார்.
இதனால் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவுமே இருக்கிறார். என்றாலும் துக்க வீடு போன்ற துயர சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு செல்லும் போதும் மியாட் சோகத்தை வெளிப்படுத்தாமல் சிரித்தபடி மகிழ்ச்சியுடன் இருப்பது மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.