நளினி உள்ளே நுழையும்
பொழுதே அம்மாவிற்குப் புரிந்துவிட்டது, இன்றும் அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்திருக்கின்றன என்று. நளினி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தாள். சமீப காலமாக, அங்கு ஏராளமான நிர்வாகக் கோளாறுகள், குழப்பங்கள், எக்கச்சக்க நெருக்கடிகள். புதிதாகச் சேர்ந்த நளினிக்கு அவற்றை தினம் தினம் எதிர்கொள்வது பெரும் சோதனையாக இருந்தது. தன்னுடைய பதட்டம், சலிப்பு எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிப் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது அவளுக்கு. இன்றும் அப்படித்தான். 'சோதனைகளை எதிர்கொள்ளாமல் சாதனைகள் இல்லை' என்று நளினிக்குப் புரியவைத்தாக வேண்டும் என்று தோன்றியது அவள் அம்மாவிற்கு.
நளினி இரவு உணவிற்காக சாப்பாட்டறைக்கு வந்தவுடன் அம்மா அவளை சமையல்கட்டிற்கு வரும்படி அழைத்தாள். 'நளினி, இன்று வித்தியாசமான ஒன்றைத் தயாரிக்க நினைத்தேன். இந்த மூன்று பாத்திரங்களிலும் நீர் கொதித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஒன்றில் காரட், ஒன்றில் முட்டை மற்றும் மூன்றாவது பாத்திரத்தில் காபித்தூள் போட்டுவைத்துவிட்டு பதினைத்து நிமிடம் கொதித்தபின் இறக்கிவிடு. நான் அவசரமாக பக்கத்துக் கடை வரை சென்றுவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றாள் அம்மா.
பத்துப்பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பிவந்தவள் நளினியை அழைத்தாள். 'நளினி! இங்கே பார், நீ வெந்நீருக்குள் போடுகையில் இந்தக் காரட் எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி இருக்கிறது?' என்று வினவினாள். நளினிக்கு ஒருபுறம் குழப்பமாகவும் ஒருபுறம் அதிசயமாகவும் இருந்தது. 'இது என்னம்மா கேள்வி, காரட் முதலில் கடினமாக இருந்தது, பிறகு வெந்தபின், மெத்தென்று ஆகிவிட்டது.' என்று பதில் கொடுத்தாள். 'இந்த முட்டை?' அம்மாவின் அடுத்த கேள்வி பிறந்தது. 'முதலில் உள்ளே மென்மையாக இருக்கும் முட்டை வெந்தபின் கடினமாக ஆகிவிட்டது' என்று சொன்னாள் நளினி. 'சரி, காபிப்பொடி என்ன ஆயிற்று?' என்ற அம்மாவின் கேள்வி நளினியைப் பொறுமை இழக்க வைத்தது. 'என்னம்மா தொணதொணக்கிறாய்? காபிப்பொடி தண்ணீருடன் சேர்ந்து 'டிகாக்ஷன்' ஆகிவிட்டது.' என்று சலிப்பாக பதில்சொன்னாள் அவள்.
'நளினி! இப்பொழுது பார். ஒரே விதமான வெந்நீர்தான். ஒரே அளவு நேரம்தான். ஆனால் கடினமாக இருந்த காரட், கொதிநீரில் வெந்தவுடன் மென்மையாக ஆகிவிட்டது. இந்தக் கொதிநீரை வாழ்வில் ஏற்படும் சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் ஒப்பிடலாம். வாழ்க்கை நாம் நினைப்பது போல இருப்பதில்லை. முட்களும், கல்லும் மண்ணும், மேடுபள்ளங்களும் நிறைந்த பாதையில்தான் நாம் செல்ல வேண்டியுள்ளது. திறமையும், வலிமையும் உடைய பலர் வாழ்க்கையில் இத்தகைய கடுமையான சங்கடங்களைச் சந்திக்கையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்துவிடுகின்றனர், சோர்ந்துபோய் தமது இலட்சியங்களைக் கைவிட்டு விடுகின்றனர்.
அடுத்ததாக முட்டையைப்பார், முதலில் உள்ளுக்குள் மென்மையாக இருக்கும் முட்டை வெந்தபின் கடினமாக மாறிவிடுகிறது. இயல்பிலேயே நல்ல அன்பாக, மென்மையான உள்ளம் படைத்த சிலர், வாழ்க்கையின் பாதையைக் கடக்கையில், தமது இயல்பான மென்மையை இழந்துவிடுகின்றனர். அன்பு இருந்த இடத்தை வெறுப்பு ஆட்கொண்டுவிடுகிறது. சுயநலமும், போட்டி பொறாமை போன்ற குணங்களும் ஆக்கிரமித்து கல்மனம் படைத்தவர்களாக மாறிவிடுகின்றனர்.
ஆனால், காபிப்பொடியைப்பார். வெந்நீர் காபிப்பொடியை மாற்றவில்லை. காபிப்பொடி நீரைச் சுவையும் மணமும் மிக்கதாக மாற்றிவிட்டது. அது மட்டுமல்ல, நீர் எவ்வளவுக்கெவ்வளவு சூடாக இருக்கிறதோ அவ்வளக்கவ்வளவு இந்த வடிநீர் சுவைமிகுந்ததாக இருக்கும். இதுபோல, சங்கடங்களும் சவால்களும் குறுக்கிடுகையில் தமது இயல்பை மாற்றிக்கொள்ளாமல், தன் சூழலையே தனது குணத்தால் நல்ல முறையில் மாற்ற முடிந்தவர்களே வெற்றியாளர்களாகிறார்கள். தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றும் தன்மையுடைய இவர்கள் தான் இருக்கும் இடத்தை, தன்வசப்படுத்துவார்கள்.
இவர்களது நல்ல குணங்களும் தன்மைகளும் பிறருக்கும் பரவுவதால் சூழலே சிறப்பாக மாறிவிடும். இந்தத் தன்மையுள்ளவர்கள், ஒவ்வொரு கடினமான சூழலையும் மேம்படுத்த புதிய வழியில் சிந்திக்கிறார்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சோதனைக்கும் ஒரு புதிய கோணத்தில் விடை தேடுகிறார்கள். பொறுமை, விடாமுயற்சி இரண்டுடன், தன் இயல்பை புறக்காரணிகளுக்காக மாற்றிக்கொள்ளாமல் வெற்றி கொள்ள நினைக்கும் மனப்பாங்கு இவை மூன்றையும் கொண்டிருக்கும் இவர்களைக் காபிக்கொட்டைக்கு ஒப்பிடலாம். நெருப்பில் வறுத்து, பின் பொடியாக்கி அதன் பின் நீரில் கொதிக்க வைக்கப்படும் காபி ஒவ்வொரு நிலையிலும் சுவையில் மேம்பட்டு வருகிறது. அதைப்போல் வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் நமது திறமையாகிய கத்தியைக் கூர்தீட்ட உதவும் கல். நமது வலிமையைப் பெருக்கிக்கொள்ள உதவும் பயிற்சி. மன உறுதியை அதிகப்படுத்த உதவும் மருந்து. வெற்றி என்ற மாளிகைக்குச் செல்ல உதவும் வழி. இதை நீ உணர வேண்டும்.
நீ படித்த, அறிவுக்கூர்மையுள்ள பெண். பிறருக்கு உதவும் மனமுள்ள பெண். உனக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.' என்று அம்மா விளக்கி முடித்தாள்.
நளினி மட்டுமல்ல, நாம் அனைவருமே காபித்தூளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் தோழமைகளே !!!
- நன்றியுடன்.. ப்ரியமுடன்
(நன்றி : ஈழநேசன், ஆக்கம் : பால கார்த்திகா)