சூரியன் எப்படி வெப்பம், ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ, அதுபோல் முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு இறைவன்.
கடவுள் எங்கே?
பிரபல விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் குழந்தைகளை மிகவும் நேசிப்பவர். அவர் சாலையில் செல்லும்போது அவரைப் பார்க்கும் குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை, "ஐயா, கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள்தான் பெரிய மேதை ஆயிற்றே, வழி சொல்லுங்கள்" என்று கேட்டது. பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தை நோக்கிக் கையைக் காட்டினார். "அதோ, பிரகாசிக்கிறதே சூரியன் அதைப் பாரேன்" என்றார். குழந்தை முயன்றது. ஆனால், உடனே கையால் கண்ணைப் பொத்திக் கொண்டு, "சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை" என்றது. உடனே பிராங்க்ளின் கூறினார் - "எனதருமைச் செல்வமே, இறைவனை கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம், ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ, அதுபோல் முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு இறைவன். எல்லையற்ற பேரறிவு இறைவன். நன்றாக ஆராயத்துவங்கு. ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவைனின் பிரதி பிம்பம் என்பதை உணர்வாய்" என்றார்.
இறைநிலையை எய்த முடியுமா?
பாரிஸ் மாநகரில் ரோடின் என்ற பெரிய சிற்பியை அணுகிய கலையார்வ மிக்க ஒரு அம்மையார், "சிற்பியே, சிலை வடிப்பது என்பது கஷ்டமான வேலையா?" என்று கேட்டார்.
"இல்லை அம்மணி" என்றார் சிற்பி.
"ஒரு பெரிய சலவைக் கல்லை வாங்குங்கள். தேவை அற்ற பகுதிகளை அதிலிருந்து செதுக்கி எடுத்து விடுங்கள்" என்று பதிலளித்தார். சாதாரணமாகத் தோன்றும் இது, சுலபம் இல்லை. இதைப் போலவே நம்மிடம் உள்ள குற்றம், குறைகளை, மாசுகளை, சுயநலங்களை, தேவையற்றவற்றை செதுக்கி எறிந்தால் இறைவனாக மாறி விடலாம் என்பர் பெரியோர்.
பிராங்களின் கூறியபடி நல்ல தன்மைகள் மெருகுகேறுவதன் உச்சக்கட்டம் இறைத் தன்மையே! இதற்கான ஆரம்ப அடித்தளமே பிரார்த்தனை.
பிரார்த்தனை, ஆன்மாவிற்கான உணவு என்கிறார் மகாத்மா காந்தி. "என்னைக் காத்து வருவது பிரார்த்தனையே; அதில்லாவிட்டால் நான் பைத்தியக்காரனாகி வெகுகாலம் ஆகியிருக்கும்" என்கிறார் அவர்.
உலகம் கனவு காணும் அனைத்தையும் விட அதிகமாக பிரார்த்தனையால் சாதிக்க முடியும் என்றார் ஆங்கில கவிஞன் டென்னிசன். (MORE THINGS ARE WROUGHT BY PRAYER THAN THIS WORLD DREAMS OF) பிரார்த்தனை நமக்காக மட்டுமின்றி நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் சேர்த்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் அவர்.
பிரார்த்தனை இன்றி அடையக்கூடிய அளவுக்குச் சிறிய வரம் எதுவுமில்லை; பிரார்த்தனையால் அடைய முடியாத அளவுக்குப் பெரிய வரமும் எதுவும் இல்லை என்பார் கவிஞர் ராபர்ட் சதே.
பிரார்த்தனை இறைவனுடன் ஒன்றுவதன் பிரதிபிம்பமே என்பார் நபிகள் நாயகம்.
சபரிமலை ஐயப்பனிடமும், திருப்பதி வெங்கடாஜலபதியிடமும், இன்னமும் நூற்றுக்கணக்கான கோயில்களிலும் மனமுருக வழிபாடு செய்து நலம் பெற்ற சம்பவங்களை உரைப்பவர் ஆயிரக்கணக்கானோர்.
துயரக் கண்ணீரால் பூமி நனைந்ததை விட பிரார்த்தனை வலிமையால், எண்ணியவை ஈடேறியதால் உலக மாந்தர் விட்ட ஆனந்தக் கண்ணீரால் பூமி நனைந்ததே அதிகம்.
GOD HAS NEVER BROKEN A PROMISE EVER SPOKEN என்பார்கள் ஆங்கிலத்தில்.
தனது உறுதிமொழி வழுவாது வரம் தருபவனே இறைவன்.
லூர்டு என்னுமிடத்தில் செல்லும் நோயாளிகள் அனைவரும் குணமாவது, பிரார்த்தனையின் வலிமையை இன்னும் உலகிற்குப் பறை சாற்றுகிறது.
பிரார்த்தனையின் வலிமையால் நோயாளிகளைக் குணப்படுத்தியவர்களுள் தலைசிறந்து நினறவர் டாக்டர் பீனியாஸ் பார்க்ஹர்ஸ்ட் க்விம்பி என்பவர் ஆவார். (DR.PHINEAS PARKHURST QUIMBY)
இவரே சைக்கோ சிகிச்சையின் தந்தை எனக் கருதப்படுகிறார். மெய்ன் என்னுமிடத்தில் பெல்பாஸ்ட் எனும் ஊரில் நூற்றிமுப்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த டாக்டர் இவர். பைபிளில் வரும் அற்புதங்கள், பலவற்றை அப்படியே மீண்டும் இவர் செய்து காட்டியதாக வரலாறு கூறுகிறது. நோயாளியை அணுகி அவருடன் பேச ஆரம்பிப்பார் க்விம்பி. அவரது ஆதாரமற்ற, தவறான பயத்தாலும் எண்ணத்தாலும், நம்பிக்கையாலுமே நோயாளி அந்த வியாதியால் அவதிப்படுகிறார் என்பதை தர்க்க ரீதியாக எடுத்துக் கூறுவார் க்விம்பி. இதைக் கேட்டு மனம் மாறி வியாதி தீர்ந்து மகிழ்ச்சியுடன் திரும்பினோர் 1849 முதல் 1869-ம் ஆண்டு முடிய ஏராளமானோர். அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என்று அவரே கூறும் சம்பவம்:-
முடமான பெண்மணி ஒருத்தி வயதானவள், நெடுங்காலம் படுக்கையிலேயே கிடந்தவள், கஷ்டப்பட்டு வந்து க்விம்பியைச் சந்தித்தாள். தன்னால் நடக்க முடியாது என்று நம்பிய அவளை பைபிளில் சில வாசகங்களைப் படித்து அர்த்தம் கூறுமாறு கேட்டார் க்விம்பி. சிறுகச் சிறுக தர்க்கரீதியான அணுகுமுறையால் அவளது மனதிலே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. தனது ஊன்று கோல்களைத் தூக்கி எறிந்து நடக்க ஆரம்பித்தாள் அவள். க்விம்பி, இது சாதனையின் சிகரம் என்று குறிப்பிடுகிறார்.
பிரெஞ்சு தேசத்து அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் டூபாய்ஸ் ஒருமுறை கூறினார்:- "காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டுப்போடுவது நான்; அந்தக் காயத்தைக் குணப்படுத்துவது ஆண்டவனே" என்று.
மனநோய்களையும், உடல் நோய்களையும் பிரார்த்தனையால் குணப்படுத்த முடியும் என்பதை அன்றாடம் நிகழும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் உலகம் முழுவதும் நிரூபித்து வருகின்றன.