Click "Like" Button To Join | |
| | PART-4 கிராமத்து கைமணம்! | |
| | Author | Message |
---|
lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: PART-4 கிராமத்து கைமணம்! Sat Jun 26, 2010 3:17 pm | |
| முள் முருங்கை அடை
நெஞ்சு சளி, கபம் இதுக்கெல்லாம் அருமருந்து முள் முருங்கை கீரை. அதனால அடிக்கடி அதை சமையல்ல சேர்த்துக்கறது கிராமத்து வழக்கம். ஆனா குழம்பு, கூட்டுனு கொடுத்தா யாரும் அவ்வளவா விரும்பி சாப்பிடமாட்டாங்கனு அடையா செஞ்சு சாப்பிடுவாங்க.
அடைனு சொன்னாலும், செய்யற முறையப் பார்த்தா பூரி மாதிரி இருக்கும். அதனால குழந்தைங்களுக்கும் இதை ரொம்ப பிடிக்கும்.
முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்செடுங்க. அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கோங்க.
இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா எடுத்து, உள்ளங்கைல வெச்சு வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம்.
இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும். இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
————————————————————-
பாசிப்பருப்பு சீயம்
முக்கால் கப் பாசிப்பருப்பை எடுத்து மலர வேக வெச்சு, கொஞ்சங்கூட ஈரம் இல்லாதபடிக்கு தண்ணிய வடிச்சுட்டு வைங்க.
அரை கப் பச்சரிசி, அரை கப் உளுந்தை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வெச்சு, நைஸா, இட்லிமாவு பதத்துக்கு அரைச்சு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து எடுத்துக்கோங்க.
பாசிப் பருப்போட முக்கால் கப் சர்க்கரை, அரை கப் தேங்காய் துருவல், அரை டீஸ்பூன் ஏலத்தூள் இதையெல்லாம் கலந்து சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிக்கோங்க. அரிசி மாவுக் கலவைல இதை முக்கியெடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க.
சூடா இருக்கறப்பவே சீயத்தை ரெண்டா வெட்டி அதுமேல பரவலா கொஞ்சம் நெய் விட்டு சாப்பிட்டா ஆஹா.. அந்த சுவைய என்னன்னு சொல்ல?! அபாரமா இருக்கும், போங்க!
இதுக்கு மேல் அலங்காரம், சேர்ப்பு எதுவுமே செய்ய வேண்டாம். அப்படியே கொடுத்தாலே குட்டிப் பிள்ளைங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.
இதுல முக்கியமான விஷயம்.. சர்க்கரை சேர்த்ததுமே பருப்பு கலவை நீர்த்துக்கும். அதனால் அந்தக் கலவைய ரொம்ப நேரம் அப்படியே வெச்சிருக்காம உடனேயே -மாவுல முக்கியெடுத்து பொரிச்சுடணும்.
தேவைப்பட்டா பருப்புக் கலவைல 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலக்கலாம். கலவை கொஞ்சம் கெட்டிப்படும். பாசிப் பருப்போட வேக வெச்சு மசிச்ச கொண்டைக் கடலை, காராமணியும் சேர்க்கலாம். ருசியும், சத்தும் கூடுதலா இருக்கும்.
—————————————————————–
சீம்பால் திரட்டு
கன்னு போட்ட நாலஞ்சு நாளுக்கு மாட்டுக்கு சுரக்கற பாலை வழக்கம் போல நாம உபயோகிக்க முடியாது. சீம்பால்னு சொல்ற அந்தப் பால் அவ்வளவு கெட்டியா புது வாசனையோட இருக்கும். கன்னுக் குட்டிக்கு சத்து கொடுக்கற அந்தப் பாலை திரட்டுப் பால் மாதிரி சுவையா செஞ்சு சாப்பிடறது ஊர் வழக்கம். செய்யறது ஈஸியா இருக்கும். ஆனா சுவை ஓஹோனு இருக்கும். செய்யறது எப்படினு சொல்றேன்..
சீம்பால் (மாடு கன்னு போட்ட ரெண்டாம், மூணாம் நாள் பால்) 2 கப் அளவுக்கு எடுத்து அதுல 1 கப் சர்க்கரை, பொடியா நறுக்கின முந்திரி துருவல் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலத் தூள் 1 டீஸ்பூன்.. எல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.
இட்லிப் பானைல தண்ணி ஊத்தி, அதுல பால் கலவை உள்ள பாத்திரத்தை வெச்சு, சன்னமான தீயில அரை மணி நேரம் வேக வைங்க. அப்புறமா கலவைல ஒரு கத்திய சொருகிப் பாருங்க. கத்தில பால் ஒட்டலேனா கலவை வெந்துடுச்சுனு அர்த்தம். அப்போ பாத்திரத்தை இறக்கிடுங்க.
கலவை ஆறினதும் ஒரு தட்டுல கவிழ்த்து சின்னச்சின்ன துண்டுகளா வெட்டி பரிமாறுங்க. எல்லாரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
ஏலத்தூள் வாசனை பிடிக்காதவங்க வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கலாம். கலர்ப் பொடிங்க கலந்து வேகவெச்சுக் கொடுத்தா பிள்ளைங்க குஷியா யிடுவாங்க.
……………………………………………………………………
| |
| | | lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: PART-5 கிராமத்து கைமணம்! Sat Jun 26, 2010 3:20 pm | |
| மரவள்ளிக் கிழங்கு புட்டு வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்!
அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பிசறுங்க.
அவ்வளவுதான் வேலை. புட்டு தயார்! இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம்.
கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
——————————————————————————————————————
தட்டைப் பயிறு அடை தட்டைப் பயிறு அடையும் கடலைப் புண்ணாக்கு சட்னியும் ஒரு கப் அளவுக்கு தட்டைப் பயிறை எடுத்து கல், மண் போகச் சுத்தப்படுத்தி, தண்ணீர்ல ஊற வைங்க. குறைஞ்சது ஆறு மணி நேரமாவது ஊறணும். அப்புறமா தண்ணிய வடிகட்டிட்டுப் பயிறை மட்டும் எடுத்து அதோட, காய்ஞ்ச மிளகாய் ரெண்டு, அரை டீஸ்பூன் சீரகம் இல்லேனா சோம்பு, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்செடுங்க.
பத்து சின்ன வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை கொஞ்சம்… இதை எல்லாத்தையும் பொடியா நறுக்கி, அரை கப் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவோட கலக்குங்க.
தோசைக்கல்லை காயவெச்சு, எண்ணெய் தடவி அதுல மாவை கனமா, சின்னச்சின்ன அடைகளா ஊத்துங்க. சுத்தியும் எண்ணெய் ஊத்தி வேக வைங்க. வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவெச்சு எடுங்க.
பூண்டு, பெருங்காயத் தூளை மாவுல கலந்துக்கறது நல்லது. ஏன்னா தட்டைப் பயிறு வாயு கோளாறை உண்டாக்கும். பூண்டு, பெருங்காயத்தை சேர்க்கறதால அந்தத் தொல்லை குறையும்.
இந்த தட்டை பயிறு அடையை வேர்க் கடலை புண்ணாக்கு சட்னியோட சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.
வேர்க்கடலை புண்ணாக்கு சட்னியை செய்யறது எப்படினும் பார்ப்போம்…
ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதுல ஆறு மிளகாய் வற்றல், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் இதையெல்லாம் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணாப் போட்டு வறுத்தெடுங்க. அப்புறமா அதுல அரைக் கப் வேர்க் கடலைப் புண்ணாக்கு, ரெண்டு பல் பூண்டு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் இதையெல்லாம் வறுத்து, கடைசியா கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவையான உப்பு, சின்ன நெல்லிக் காய் அளவுக்கு புளி இதையெல்லாம் சேர்த்து வதக்கி இறக்குங்க. ஆறினதும் நைஸா அரைச்செடுத்தா… அதுதான் வேர்க்கடலை புண்ணாக்கு சட்னி!
____________________________________________________________
கருப்பட்டி பணியாரம் ஒரு கப் பச்சரிசியை தண்ணில அரை மணி நேரம் ஊற வெச்சு, வடிகட்டி பொடிச்சுக் குங்க. ஒரு கப் கருப் பட்டியை பொடிச்சு, கால் கப் தண்ணீர் ஊத்தி, காய்ச்சுங்க. கருப்பட்டி கரைஞ்சதும் இறக்கி, வடிகட்டி, மறுபடியும் காய்ச்சுங்க. அஞ்சு நிமிஷம் கொதிச்சதும் இறக்கி ஆற வைங்க.
இந்த கருப்பட்டிக் கரைசலை பச்சரிசி மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கலக்குங்க. தோசை மாவு பதத்துக்கு வந்துடும்.
பணியாரத்தை பொரிச்செடுக்கிற அளவுக்கு எண்ணெயை வடை சட்டில ஊத்தி, அதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் யையும் ஊத்தி மிதமான தீயில காயவைங்க. காய்ஞ்சதும் அதுல மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமா ஊத்துங்க. மாவு வெந்து, மேல வந்ததும் திருப்பிப் போட்டு வேகவெச்செடுங்க.
இந்த பணியாரத்தை ரெண்டு நாள் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம். கருப்பட்டி மணம் கமகமக்க, அவ்வளவு ருசியா இருக்கும் இந்த பணியாரம்.
___________________________________________________________________
உளுந்து பலகாரம்
உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் கலந்து வைத்து, பொரித்த உளுந்து உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் அதில் ஊற வைத்து, பிறகு சாப்பிட்டுப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்!
……………………………………………………………………
| |
| | | lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பகுதி-06 கிராமத்து கைமணம்! Sat Jun 26, 2010 3:32 pm | |
| பருப்பிட்ட பணியாரம்
ஒரு கப் பச்சரிசி, கால் கப் பாசிப்பருப்பை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைங்க. ஊறின பிறகு தண்ணிய வடிச்சுட்டு, அரிசி, பருப்போட ஒரு மூடி தேங்காயை துருவிச் சேர்த்து நைஸா, கொஞ்சம் கெட்டியா அரைச்செடுங்க.
ஒண்ணே கால் கப் வெல்லம், இல்லேனா… சர்க்கரையை கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க வெச்சு வடிகட்டுங்க. இந்த வெல்லக் கரைசல், அரை டீ ஸ்பூன் ஏலக்காத்தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா… இது எல்லாத்தையும் மாவோட சேர்த்துக் கலக்குங்க.
குழிப் பணியாரக் கல்லை காயவெச்சு, ஒவ்வொரு குழிலயும் கொஞ்சம் கொஞ்சமா நெய், இல்லேனா… எண்ணெய ஊத்தி சூடானதும் குழி நிறைய மாவை ஊத்துங்க. தீ மிதமா எரியணும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும் வேக வெச்செடுங்க.
சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்க.. இந்தப் பணியாரம் ஜோரா இருக்கும். இதை ரெண்டு நாள் வரைக்கும்கூட வெச்சிருந்து சாப்பிடலாம்.
தேங்காயை துருவிப் போடறதுக்கு பதிலா, அரைச்சு கெட்டியா பால் எடுத்து மாவுல கலந்தா, இன்னும் நல்லா இருக்கும். ஏலத்தூளுக்கு பதிலா கால் டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்தா, இந்தக் கிராமத்துப் பலகாரத்தை சாப்பிட குழந்தைங்க போட்டி போடுவாங்க.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம்
ரெண்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்து ஆவில வேகவைங்க. தவறியும் தண்ணில வேகவெச்சிடாதீங்க, கிழங்குல தண்ணி கோத்து கொழகொழனு ஆகிடும்.
வெந்த கிழங்கை ஆற வெச்சு தோலை எடுத்துட்டு, மசிச்சு வைங்க. கால் கப் பாசிப் பருப்பை மலர வேக வைங்க. முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி ஊத்தி சூடாக்கி, கரைஞ்சதும் இறக்கி, வடிகட்டி வைங்க. மசிச்ச கிழங்கோட பாசிப் பருப்பு, வெல்லக் கரைசல், கால் கப் தேங்காய் துறுவல், கால் டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து அடுப்புல வெச்சுக் கிளறுங்க. பாத்திரத்துல ஒட்டாம உருண்டு வந்ததும் இறக்கிடுங்க. ஆறினதும் சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டி வெச்சுக்குங்க.
மைதால ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தேவையான தண்ணி விட்டுக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைச்சு வைங்க.
அப்புறம், கிழங்கு உருண்டைகளை ஒவ்வொண்ணா எடுத்து மைதா கரைசல்ல முக்கி எடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுக்க வேண்டியதுதான்.
இப்ப, சாப்பிட்டுப் பாருங்க… அந்த அபார சுவை அடிக்கடி இதை செஞ்சு சாப்பிடச் சொல்லும்!
இந்த சீயத்துக்கு மேல் மாவா மைதாவத்தான் வெச்சுக்கணும்னு இல்லை. அரை கப் உளுந்து, அரை கப் அரிசியை ஒண்ணாச் சேர்த்து அரைச்சு, அந்த மாவுல பூரண உருண்டைகளை முக்கி எடுத்து பொரிச்சா அந்த சுவையும் அற்புதமா இருக்கும்.
புழுங்கல் அரிசி கொழுக்கட்டை ஜவ்வரிசி, பாசிப்பருப்பு ரெண்டையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து, ஒண்ணாவும், ஒரு கப் புழுங்கல் அரிசியை தனியாவும் ஒன்றரை மணி நேரம் ஊற வைங்க. அரிசி நல்லா ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு, கரகரப்பா, இட்லி மாவு பதத்துக்கு அரைச்செடுங்க. பாசிப்பருப்பு, ஜவ்வரிசி ரெண்டும் ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு, மாவோட கலக்குங்க. அதோட, கால் கப் தேங்காய் துறுவல், தேவையான உப்பு சேர்த்துக் கரைக்கணும்.
வடை சட்டில ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய ஊத்தி சூடாக்கி, அரை டீ ஸ்பூன் கடுகு, ஒரு டீ ஸ்பூன் உளுந்து, ரெண்டு மிளகாய் வத்தல், கொஞ்சம் கறிவேப்பிலை எல்லாத்தையும் தாளிச்சு, அதுல மாவைக் கொட்டி கெட்டியாகற வரைக்கும் கிளறி, இறக்கி வைங்க. ஆறினதும் சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு ஆவில வேக வெச்செடுங்க.
செய்யறதுக்கு சுலபமான இந்தக் கொழுக்கட்டை, சுவைல சொக்க வைக்கும்!
பப்பாளிக்காய் வடை
அரிசி, அவல் தலா அரை கப், முக்கால் கப் கடலைப் பருப்பு… இவை மூன்றையும் தனித்தனியே ஊற வைத்து, பிறகு ஒன்றாகச் சேர்த்து, ஐந்து மிளகாய் வற்றலையும் போட்டு சற்று கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். முற்றிய நடுத்தர சைஸ் பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து தோல், விதையை நீக்கி துருவுங்கள். பெரிய வெங்காயம் 4, சிறிதளவு கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்குங்கள். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து வையுங்கள்.
மாவில் வெங்காயம், புளி கரைசல், பப்பாளி துறுவல், கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா, 2 டீஸ்பூன் வெல்லத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து, சிறிது சிறிதாக எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். தக்காளிச் சட்னியைத் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.
நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம் | |
| | | Sponsored content
| Subject: Re: PART-4 கிராமத்து கைமணம்! | |
| |
| | | | PART-4 கிராமத்து கைமணம்! | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |