lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பகுதி-06 கிராமத்து கைமணம்! Wed Apr 13, 2011 2:15 pm | |
| பருப்பிட்ட பணியாரம்
ஒரு கப் பச்சரிசி, கால் கப் பாசிப்பருப்பை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைங்க. ஊறின பிறகு தண்ணிய வடிச்சுட்டு, அரிசி, பருப்போட ஒரு மூடி தேங்காயை துருவிச் சேர்த்து நைஸா, கொஞ்சம் கெட்டியா அரைச்செடுங்க.
ஒண்ணே கால் கப் வெல்லம், இல்லேனா… சர்க்கரையை கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க வெச்சு வடிகட்டுங்க. இந்த வெல்லக் கரைசல், அரை டீ ஸ்பூன் ஏலக்காத்தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா… இது எல்லாத்தையும் மாவோட சேர்த்துக் கலக்குங்க.
குழிப் பணியாரக் கல்லை காயவெச்சு, ஒவ்வொரு குழிலயும் கொஞ்சம் கொஞ்சமா நெய், இல்லேனா… எண்ணெய ஊத்தி சூடானதும் குழி நிறைய மாவை ஊத்துங்க. தீ மிதமா எரியணும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும் வேக வெச்செடுங்க.
சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்க.. இந்தப் பணியாரம் ஜோரா இருக்கும். இதை ரெண்டு நாள் வரைக்கும்கூட வெச்சிருந்து சாப்பிடலாம்.
தேங்காயை துருவிப் போடறதுக்கு பதிலா, அரைச்சு கெட்டியா பால் எடுத்து மாவுல கலந்தா, இன்னும் நல்லா இருக்கும். ஏலத்தூளுக்கு பதிலா கால் டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்தா, இந்தக் கிராமத்துப் பலகாரத்தை சாப்பிட குழந்தைங்க போட்டி போடுவாங்க.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம்
ரெண்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்து ஆவில வேகவைங்க. தவறியும் தண்ணில வேகவெச்சிடாதீங்க, கிழங்குல தண்ணி கோத்து கொழகொழனு ஆகிடும்.
வெந்த கிழங்கை ஆற வெச்சு தோலை எடுத்துட்டு, மசிச்சு வைங்க. கால் கப் பாசிப் பருப்பை மலர வேக வைங்க. முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி ஊத்தி சூடாக்கி, கரைஞ்சதும் இறக்கி, வடிகட்டி வைங்க. மசிச்ச கிழங்கோட பாசிப் பருப்பு, வெல்லக் கரைசல், கால் கப் தேங்காய் துறுவல், கால் டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து அடுப்புல வெச்சுக் கிளறுங்க. பாத்திரத்துல ஒட்டாம உருண்டு வந்ததும் இறக்கிடுங்க. ஆறினதும் சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டி வெச்சுக்குங்க.
மைதால ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தேவையான தண்ணி விட்டுக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைச்சு வைங்க.
அப்புறம், கிழங்கு உருண்டைகளை ஒவ்வொண்ணா எடுத்து மைதா கரைசல்ல முக்கி எடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுக்க வேண்டியதுதான்.
இப்ப, சாப்பிட்டுப் பாருங்க… அந்த அபார சுவை அடிக்கடி இதை செஞ்சு சாப்பிடச் சொல்லும்!
இந்த சீயத்துக்கு மேல் மாவா மைதாவத்தான் வெச்சுக்கணும்னு இல்லை. அரை கப் உளுந்து, அரை கப் அரிசியை ஒண்ணாச் சேர்த்து அரைச்சு, அந்த மாவுல பூரண உருண்டைகளை முக்கி எடுத்து பொரிச்சா அந்த சுவையும் அற்புதமா இருக்கும்.
புழுங்கல் அரிசி கொழுக்கட்டை ஜவ்வரிசி, பாசிப்பருப்பு ரெண்டையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து, ஒண்ணாவும், ஒரு கப் புழுங்கல் அரிசியை தனியாவும் ஒன்றரை மணி நேரம் ஊற வைங்க. அரிசி நல்லா ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு, கரகரப்பா, இட்லி மாவு பதத்துக்கு அரைச்செடுங்க. பாசிப்பருப்பு, ஜவ்வரிசி ரெண்டும் ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு, மாவோட கலக்குங்க. அதோட, கால் கப் தேங்காய் துறுவல், தேவையான உப்பு சேர்த்துக் கரைக்கணும்.
வடை சட்டில ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய ஊத்தி சூடாக்கி, அரை டீ ஸ்பூன் கடுகு, ஒரு டீ ஸ்பூன் உளுந்து, ரெண்டு மிளகாய் வத்தல், கொஞ்சம் கறிவேப்பிலை எல்லாத்தையும் தாளிச்சு, அதுல மாவைக் கொட்டி கெட்டியாகற வரைக்கும் கிளறி, இறக்கி வைங்க. ஆறினதும் சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு ஆவில வேக வெச்செடுங்க.
செய்யறதுக்கு சுலபமான இந்தக் கொழுக்கட்டை, சுவைல சொக்க வைக்கும்!
பப்பாளிக்காய் வடை
அரிசி, அவல் தலா அரை கப், முக்கால் கப் கடலைப் பருப்பு… இவை மூன்றையும் தனித்தனியே ஊற வைத்து, பிறகு ஒன்றாகச் சேர்த்து, ஐந்து மிளகாய் வற்றலையும் போட்டு சற்று கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். முற்றிய நடுத்தர சைஸ் பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து தோல், விதையை நீக்கி துருவுங்கள். பெரிய வெங்காயம் 4, சிறிதளவு கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்குங்கள். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து வையுங்கள்.
மாவில் வெங்காயம், புளி கரைசல், பப்பாளி துறுவல், கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா, 2 டீஸ்பூன் வெல்லத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து, சிறிது சிறிதாக எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். தக்காளிச் சட்னியைத் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.
| |
|