BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்   Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்   Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்   Icon_minitimeWed May 11, 2011 3:38 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

25. மாதோட்ட மாநகரம்



நமது கதாநாயகன் வந்தியத்தேவனை நாம் விட்டுப்பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. தஞ்சையிலேயே அதிக நாள் தங்கி விட்டோம். சில நாள் தான் என்றாலும் நெடுங்காலமாகத் தோன்றுகிறது. இந்தச் சில நாளைக்குள் வந்தியத்தேவன் ஈழத்துக் கடற்கரையோடு நடந்து சென்று பாலாவி நதிக்கரையில் இருந்த மாதோட்ட மாநகரை அடைந்திருந்தான். இராமேசுவரக் கடலுக்கு அப்புறத்தில் ஈழ நாட்டுக் கடற்கரையில் இருந்த அம்மாநகரம், திருஞான சம்பந்தர் காலத்திலும், சுந்தரமூர்த்தியின் காலத்திலும் இருந்ததுபோலவே இப்போது பசுமையான மரங்கள் அடர்ந்த சோலைகளினால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிய காட்சி அளித்தது. மாவும், பலாவும், தென்னையும், கமுகும், கதலியும், கரும்பும் அந்தக் கரையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களில் வானரங்கள் ஊஞ்சலாடின. வரிவண்டுகள் பண்ணிசைத்தன; பைங்கிளிகள் மழலை பேசின.

அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் கடல் அலைகள் மோதிச் சலசலவென்று சப்தம் உண்டாக்கின. மாதோட்ட நகரின் துறைமுகத்தின் பெரிய மரக்கலங்கள் முதல் சிறிய படகுகள் வரையில் நெருங்கி நின்றன. அவற்றிலிருந்து இறக்கப்பட்ட பண்டங்கள் மலை மலையாகக் குவிந்துகிடந்தன. இவையெல்லாம் சம்பந்தர் சுந்தரர் காலத்தில் இருந்தது போலவே இருந்தாலும் வேறு சில மாறுதல்கள் காணப்பட்டன. மாதோட்ட நகரின் வீதிகளில் இப்போது கேதீசுவர ஆலயத்துக்குச் செல்லும் அடியார்களின் கூட்டத்தை அதிகம் காணவில்லை. பக்தர்கள் இறைவனைப் பாடிப் பரவசமடைந்த இடங்களிலெல்லாம் இப்போது போர் வீரர்கள் காணப்பட்டனர். கத்தியும் கேடயமும், வாளும் வேலும், கையில் கொண்ட வீரர்கள் அங்கு மிங்கும் திரிந்தார்கள்.

சென்ற நூறு ஆண்டுகளுக்கு அதிகமாக அந்த நகரம் ஒரு யுத்த கேந்திரஸ்தலமாக விளங்கி வந்தது. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துப் போருக்கு வந்த படைகள் பெரும்பாலும் அங்கேதான் இறங்கின. திரும்பிச் சென்ற படைகளும் அங்கேதான் கப்பல் ஏறின. நகரம் பல தடவை கைமாறிவிட்டது. சில சமயம் இலங்கை மன்னர்களிடமும், சில சமயம் பாண்டிய அரசர்களிடமும் அது இருந்தது. பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

அத்தகைய யுத்த கேந்திர நகரத்தின் கோட்டை மதில் வாசலில் ஒரு நாள் வந்தியத்தேவன் வந்து நின்றான். நகருக்குள் போக வேண்டும் என்றான். சோழ சேநாதிபதியைப் பார்க்க வேண்டும் என்றான். காவலர்கள் அவனை உள்ளே விட மறுத்தார்கள். அதன் பேரில், முன்னர் கடம்பூரில் கையாண்ட யுக்தியை இங்கும் அவன் கையாண்டான். காவலர்களைப் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தான். காவலர்கள் அவனைச் சிறைப் பிடித்துக் கோட்டைத் தலைவனிடம் கொண்டு போனார்கள். வந்தியத்தேவன் கோட்டைத் தலைவனிடம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கு முக்கியமான ஓலை கொண்டு வந்திருப்பதாகவும், அதைப்பற்றி சோழ சேநாதிபதியிடந்தான் விவரம் சொல்ல முடியும் என்று கூறினான். அவனைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். 'பொன்னியின் செல்வ'னுக்கு ஓர் ஓலையும், பழுவூர் பனை இலச்சினையும் அவனிடம் இருக்கக் கண்டார்கள்.

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி அச்சமயம் இலங்கைப் படையின் சேநாதிபதியாக இருந்தார். அவரிடம் போய்ச் சொன்னார்கள். பூதி விக்கிரம கேசரி அப்போது முதன் மந்திரி அநிருத்தப்பிரமராயருடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் இராமேசுவரம் வரையில் போவதற்கு ஆயத்தமாக இருந்தார். ஆகையால் திரும்பி வந்து விசாரிப்பதாகவும் அது வரையில் அந்த வீரனைக் காவலில் வைத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுப் போனார்.

பிறகு வந்தியத்தேவனை அழைத்துப்போய் ஒரு பாழடைந்த மாளிகையில் ஓர் அறையில் தள்ளிப் பூட்டினார்கள். வாசலில் காவலும் போட்டார்கள். வந்தியத்தேவன் நீண்ட வழிப்பிரயாணத்தினால் களைப்படைந்திருந்தான் ஆகையால், தன்னைச் சிறைப்படுத்தியது குறித்து அவன் மகிழ்ந்தான். இரண்டொரு நாள் அலைச்சல் இன்றி ஓய்வு பெறலாம் அல்லவா?

முதல்நாள் அவனுக்கு அத்தகைய ஓய்வு கிடைத்தது. ஆனால் இரண்டாம் நாள் ஒரு தொல்லை ஏற்பட்டது.

அவன் இருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏதேதோ விசித்திரமான சப்தங்கள் கேட்கத் தொடங்கின. யாரோ ஒருவன் இன்னொருவனை அதட்டி மிரட்டினான். அவனுடைய வீரப்பேச்சுக்கள் பிரமாதமாயிருந்தன. "இந்தா!". "சீச்சீ!", "போ போ!", "கிட்ட வராதே!" "அருகில் வந்தாயோ கொன்று விடுவேன்!", "அடித்து நொறுக்கிவிடுவேன்!" "ஜாக்கிரதை!" "உன் உயிர் உன்னுடையதல்ல!" "யமலோகத்துக்கு அனுப்பி விடுவேன்!", "ஒரே உதையில் உன் உயிர் போய்விடும்!" என்று இப்படியெல்லாம் அடுத்த அறையில் ஒருவன் இரைந்து கொண்டிருந்தான். யாரைப் பார்த்து இப்படி அவன் வீர வாதமிடுகிறான் என்று தெரியவில்லை. ஒரே குரல் தான் கேட்டதே தவிர, அதற்கு எதிர்க்குரல் கேட்கவில்லை. ஒருவேளை யாராவது பைத்தியம் பிடித்த போர் வீரனாயிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்படியென்றால், இரவெல்லாம் தூக்கமில்லாமல் செய்துவிடுவானே? கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் அதற்கும் இடையூறு நேர்ந்து விட்டதே...!

"சொன்னால் கேட்கமாட்டாயா? சும்மா போகமாட்டாயா சரி, சரி! உன்னை என்ன செய்கிறேன், பார்!" இந்த வார்த்தைகளுக்குப் பிறகு தொப்பென்று அவனுடைய அறையில் வந்து ஏதோ விழுந்தது. படுத்திருந்த வந்தியத்தேவன் தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். விழுந்தது என்னவென்று உற்றுப் பார்த்தான். உடனே அவனையறியாமல் சிரிப்பு வந்தது. கலகலவென்று சிரித்தான் ஏனெனில், அடுத்த அறையிலிருந்து அப்படி வேகமாக வந்து விழுந்தது ஒரு பூனை என்று தெரிந்தது!

"ஓஹோ! உனக்குச் சிரிக்க வேறே தெரியுமா? சிரி! சிரி! மறுபடியும் இங்கே மட்டும் வராதே!" என்று அந்தக் குரல் சொல்லியது.

யாரோ பைத்தியக்காரன் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் பூனையுடன் இவ்வளவு வாதமிடுவானா? அல்லது பூனை மனிதரைப் போல் சிரிக்கும் என்று தான் எண்ணுவானா? ஆனால் அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் அப்படியெல்லாம் பேசிய குரல் அவனுக்குத் தெரிந்த குரலோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. எங்கேயோ, எப்போதோ கேட்ட குரலாகத் தோன்றியது. ஆனால் யாருடைய குரல்? எங்கே கேட்ட குரல்? - நினைத்து நினைத்துப் பார்த்தும் ஞாபகம் வரவில்லை!

எப்படியாவது இருக்கட்டும், யாராவது இருக்கட்டும் என்று எண்ணி வந்தியத்தேவன் படுத்துக் கொண்டான். கண்ணைமூடித் தூங்கப் பார்த்தான், ஆனால் தூங்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவனுடைய உள்ளங்கால்களில் ஏதோ வழவழவென்று தட்டுப்பட்டது. கண்ணைத் திறந்து பார்த்தால் பூனை அங்கே படுத்திருந்தது. அட கடவுளே! இதைக் கால் மாட்டில் வைத்துக் கொண்டு எப்படித் தூங்குவது? உதைத்துத் தள்ளினான். பூனை நகர்ந்து சென்றது. கண்ணை முடினான்; மறுபடி அவன் பக்கத்தில் கையில் ஏதோ மிருதுவாகத் தட்டுப்பட்டது. கண்ணைத் திறந்து பார்த்தால் பூனை அவன் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தது!

மறுபடியும் கையினால் பிடித்துத் தள்ளினான். பூனை தூரச் சென்றது. மீண்டும் கண்ணை மூடினான். தலைமாட்டில் வந்து பூனை படுத்துக்கொண்டு வாலினால் அவனுடைய நெற்றியைத் தடவத் தொடங்கியது.

வாளையும் வேலையும் அச்சமின்றித் தாங்கக்கூடிய அவ்வீரனுக்குப் பூனை தன் வாலினால் தடவும் அனுபவத்தைத் தாங்க முடியவில்லை. எழுந்து, பூனையை அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான். அவனுடைய அறைக்கும் அடுத்த அறைக்கும் மத்தியில் இருந்த சுவரின் உச்சியில் கொஞ்சம் இடிந்து பொக்கை விழுந்திருந்தது. அதன் வழியாகப் பூனையைத் தூக்கி எறிந்தான்.

அடுத்த அறையில் சிறிது நேரம் ஒரே ரகளையாயிருந்தது. மனிதக் குரலின் கூப்பாட்டுடன் பூனையின் கரமுரா சத்தமும் சேர்ந்து கொண்டது. சற்று நேரத்துக்குப் பிறகு "போ! தொலை!" என்ற குரல் கேட்டது. பூனையின் 'மியாவ் மியாவ்' சத்தம் கொஞ்ச தூரம் வரையில் சென்று மறைந்தது. பிறகு நிசப்தம் நிலவியது.

வந்தியத்தேவன் கண்ணயர்ந்தான். அரைத்தூக்க நிலையில் ஒரு கனவு கண்டான். மிக இன்பமான கனவு. இளைய பிராட்டி குந்தவை அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவன் நெற்றியைத் தடவிக் கொடுத்தாள். ஆகா! பூனையின் வாலுக்கும் இளவரசியின் கைவிரலுக்கும் எத்தனை வித்தியாசம்!

சட்டென்று மறுபடி விழிப்பு வந்தது. கனவு கலைந்துவிட்டதே என்று வருத்தமாயிருந்தது.

அடுத்த அறையிலிருந்து யாரோ சுவரைத் தட்டினார்கள் அந்தப் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்.

"யார் அங்கே? பூனையை எடுத்து எறிந்தது யார்?"

வந்தியத்தேவன் மறுமொழி சொல்லவில்லை. மௌனமாயிருந்தான். ஆ! இது என்ன, பூனை பிறாண்டுவது போன்ற சப்தம் மறுபடியும்? இல்லை, இல்லை! யாரோ அப்புறத்தில் சுவரில் ஏறுவதற்கு முயல்கிறார்கள்!

வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. படுத்தபடியே கவனமாய்க் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் முன் ஜாக்கிரதையாகக் கைமட்டும் கத்திபிடியில் இருந்தது.

சுவரின் உச்சியிலிருந்து பொக்கையில் முதலில் இரு கைகள் தெரிந்தன. பிறகு ஒரு முண்டாசு தெரிந்தது. முண்டாசுக்கடியில் ஒரு முகம் மேலே வந்து குனிந்து பார்த்தது.

ஆ! இவன் ஆழ்வார்க்கடியான் அல்லவா? தலைப்பாகை கட்டியிருப்பதால் தோற்றத்தில் சிறிது மாறியிருக்கிறான்! ஆனால் ஆழ்வார்க்கடியான் என்பதில் சந்தேகமில்லை.

இவன் எதற்காக, எப்படி இங்கே வந்தான்? நாம் இருப்பது தெரிந்துதான் வந்திருக்கவேண்டும்! உதவி செய்ய வந்திருக்கிறானா? அல்லது இடையூறு செய்ய வந்திருக்கிறானா?

வந்தியத்தேவன் எழுந்து உட்கார்ந்து, "ஓ வீரவைஷ்ணவரே! வருக! வருக! சிவபுண்ணிய ஸ்தலமாகிய திருக்கேதீசுவரத்துக்கு வருக! வருக!" என்றான்.

"தம்பி! நீதானா? நினைத்தேன்! வேறு யார் இவ்வளவு அமுக்குப் பிள்ளையாராகக் குரல் காட்டாமல் உட்கார்ந்திருக்க முடியும்?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிக்கொண்டு அறையில் குதித்தான்.








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. மாதோட்ட மாநகரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 5. நடுக்கடலில்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 36. பாண்டிமாதேவி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 52. விடுதலைக்குத் தடை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: