BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  4. ஐயனார் கோவில் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. ஐயனார் கோவில்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  4. ஐயனார் கோவில் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. ஐயனார் கோவில்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  4. ஐயனார் கோவில் Icon_minitimeSun May 22, 2011 4:08 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

4. ஐயனார் கோவில்



கெடில நதிக் கரையில் பாட்டனும் பேரனும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருக்கானாட்டுமுள்ளூர் என்னும் ஊரில் பழைய நண்பர்களான ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் ஒரு விநோதமான காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் வட காவேரியாகிய கொள்ளிடமும் தென் காவேரியைப் போலவே புண்ணிய நதியாகக் கருதப்பட்டு வந்தது. துலாமாதத்தில் தினந்தோறும் கானாட்டுமுள்ளூர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் இடபாரூடராகக் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளி ஸ்நானத்துக்கு வந்துள்ள பக்தர்களுக்குச் சேவை தருவது வழக்கம். மத்தியான வேளையில் ஒவ்வொரு நாளும் உற்சவமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். விஷ்ணு கோயில் அந்த ஊரில் சிறிதாக இருப்பினும் அந்தக் கோயிலிலிருந்தும் பகவான் கருட வாகனத்தில் ஆரோகணித்துக் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளுவார்.

இவ்விதம் துலா மாதத்தில் வட காவேரியில் ஸ்நானம் செய்வதற்காக வந்து கூடியிருந்த ஜனக்கூட்டத்தினிடையே ஆழ்வார்க்கடியான் ஒரு நாவல் கிளையை மண்ணில் நட்டு வைத்து கொண்டு, "நாவலோ நாவல்! நாவலோ நாவல்! இந்த நாவலந் தீவில் வைஷ்ணவ சமயமே மேலான சமயம் என்று நிலைநாட்டுவதற்கு வாதப் போர் புரிய வந்துள்ளேன். சைவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், காபாலிகர்கள், காலாமுகர்கள், புத்தர்கள், சமணர்கள் யார் வேணுமானாலும் வாதப் போர் புரிய வரலாம். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை என் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வலம் வருவேன், அவர்கள் தோற்றால் இடுப்புத் துணியைத் தவிர மற்றதையெல்லாம் இங்கே கொடுத்து விட்டுப் போக வேணும்! நாவலோ நாவல்" என்று கத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ருத்திராட்ச மாலைகள், மகர கண்டிகள், கமண்டலங்கள், குண்டலங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், பொற்காசுகள் ஆகியவை குவிந்து கிடந்தன. இவற்றிலிருந்து வெகு நேரம் வாதமிட்டுப் பலரை வாதப் போரில் வென்றிருக்க வேண்டும் என்பது தெளிவாயிருந்தது. அவனுக்குப் பக்கத்தில் கடம்பமரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு வந்தியத்தேவன் கையில் உருவிய கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். இப்போது அவனுடைய அரையில் உடுத்திய ஒரு துணியும், கையில் ஒரு கத்தியும் மட்டும் தான் இருந்தன. அவனுடைய தோற்றத்திலிருந்து ஆழ்வார்கடியான் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கப் பார்த்தவர்களை அவன் கத்தியை வீசிப் பயமுறுத்தி அனுப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் கூட்டமாகவும், கோஷித்துக் கொண்டும் வந்த சைவர் கூட்டம் ஒன்றைப் பார்த்து அவன் கூறிய மொழிகளிலிருந்தும் அது வெளியாயிற்று.

"எச்சரிக்கை! நியாயமாக வாதப் போர் செய்வோர் செய்யலாம். அத்துமீறி இந்த வைஷ்ணவன் மீது யாராவது கையை வைத்தால் இந்த வாளுக்கு இரையாவார்கள்!" என்று கூறியதுடன், கத்தியையும் இரு முறை சுழற்றினான். கோபத்துடன் வந்த சைவர்கள் சாந்தமடைந்தார்கள். அவர்களில் ஒருவர், "ஓ வைஷ்ணவனே! ஏதோ நீ இன்றைக்கு வாதத்தில் ஜெயித்து விட்டதாக எண்ணிக் கர்வம் கொள்ளாதே! திருநாரையூருக்குப் போ! அங்கே உன்னை வாதில் வென்று புறமுதுகிட்டு ஓடச் செய்யக்கூடிய நம்பியாண்டார் நம்பி இருக்கிறார்!" என்றார்.

"உங்கள் திருநாரையூர் நம்பியைத் திருநாராயணபுரத்து அனந்த பட்டரிடம் வந்து வாதமிடச் சொல்லுங்கள்! அங்கே நானும் ஒருவேளை இருந்தாலும் இருப்பேன்!" என்று கூறினான் ஆழ்வார்க்கடியான்.

பலமுறை அவன் "நாவலோ நாவல்!" என்று கூவியும் யாரும் புதிதாக வாதமிட வரவில்லை. எனவே, நாவல் கிளையை எடுத்துவிட்டுச் சங்கு சக்கரம் பொறித்த வெற்றிக் கொடியை ஆழ்வார்க்கடியான் நட்டான். பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவர்கள் சிலர் உடனே அருகில் வந்து அவனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு,

"நாராயணனே நம் தெய்வம்!
நாமெல்லாரும் துதி செய்வம்!"

என்று பாடிக் கொண்டு கூத்தாடினார்கள். பிறகு அவர்கள், "வீர வைஷ்ணவனே! எங்கள் இல்லத்துக்கு வந்து அமுது செய்து அருள வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். "அங்ஙனமே ஆகுக!" என்று ஆழ்வார்க்கடியான் கம்பீரமாகக் கூறிவிட்டு வந்தியத்தேவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். இருவரும் புளியோரை, திருக்கண்ணமுது, ததியோன்னம் ஆகியவற்றை வயிறு முட்டும்படி ஒரு கை பார்த்தார்கள். ஆழ்வார்க்கடியான் தான் வாதப் பேரில் சம்பாதித்த பொருள்களில் அங்கவஸ்திரமாக அணியக்கூடிய பீதாம்பரம் ஒன்றை மட்டும் வந்தியத்தேவனிடம் கொடுத்து விட்டு மற்றவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் கொடுத்து அவற்றின் பெறுமானத்துக்குப் பொற்கழஞ்சுகள் பெற்றுக் கொண்டான். வைஷ்ணவ சமயத்தின் மேன்மையை நிலைநாட்டிக் கொண்டு வடக்கே ஹரித்வாரம் வரையில் போக வேண்டியிருப்பதால் தனக்குப் பொற்காசுகள் தேவை என்பதாக அவன் தெரிவித்துக் கொண்டான். ஸ்ரீ வைஷ்ணவர்களும் மனமுவந்து பொருள்களின் பெறுமானத்துக்கு அதிகமாகவே பொற்காசுகள் கொடுத்தார்கள். பெற்றுக் கொண்டு ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் பிற்பகலில் கடம்பூரை நோக்கிப் பிரயாணமானார்கள்.

கொள்ளிடத்தில் அப்போது பெருவெள்ளம் போய்க் கொண்டிருந்தபடியால் அவர்கள் ஏறிவந்த குதிரைகளைக் கொண்டு வரமுடியவில்லை. அவர்கள் நதியைக் கடந்த ஓடத்தில் ஜனங்கள் அதிகமாக ஏறியிருந்தபடியால், படகு கரையை அடையும் சமயத்தில் கவிழ்ந்துவிட்டது. மற்றவர்களைப் போல் வந்தியத்தேவனும் ஆற்று வெள்ளத்தில் விழுந்து நீந்திக் கரை சேர வேண்டியதாயிற்று. அச்சமயம் அத்தனை காலமாக எத்தனையோ நெருக்கடியான நிகழ்ச்சிகளிலும் வந்தியத்தேவன் காப்பாற்றிக் கொண்டு வந்த அவனுடைய அரைக்கச்சச் சுருளும் அதில் அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த இலச்சினைகளும், இளையபிராட்டி தந்த ஓலையுங்கூட நதி வெள்ளத்தில் போய்விட்டன. அவற்றுடன் இருந்த பொன் நாணயங்களும் போய்விட்டன. புதிய குதிரைகள் வாங்குவதற்குப் பணம் சேகரிப்பதற்காவே மேற்கூறிய யுக்தியை அவர்கள் கையாண்டார்கள். யுக்தி பலித்துக் கொஞ்சம் பணமும் கிடைத்தது. ஆனால் அந்த கிராமாந்தரப் பகுதிகளில் குதிரை எங்கும் விலைக்குக் கிடைக்காது என்றும் தெரிந்தது. கடம்பூர் கிராமத்தில் வாரம் ஒருநாள் நடைபெறும் சந்தையில் ஒருவேளை குதிரைகள் விற்பனைக்கு வரலாம்; இல்லாவிடில் திருப்பாதிரிப்புலியூர் சென்று வாங்க வேண்டும்.

கடம்பூருக்குப் போவதா, வேண்டாமா என்பது பற்றி அந்த நண்பர்களுக்குள் விவாதம் நடந்தது. அதில் உள்ள சாதக பாதகங்களைப் பற்றி விவாதித்தார்கள். கடம்பூரில் ஆதித்த கரிகாலரின் வருகையைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தாலும் கிடைக்கலாம். காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டாரா, எந்த வழியாக வருகிறார் என்று ஏதேனும் தகவல் தெரிந்தால் நல்லது அல்லவா? ஆனால் கடம்பூரில் தெரிந்தவர்களின் கண்ணில் படக் கூடாது. கந்தமாறனைச் சந்திக்க நேர்ந்து விட்டால் ஆபத்தாய்ப் போய்விடும். ஒருவேளை பழுவேட்டரையரின் பரிவாரங்கள் இதற்குள் வந்திருந்தால், அதுவும் தொல்லைத்தான்!

"வைஷ்ணவனே! உனக்குத்தான் இரவில் சுவர் ஏறிக் குதிக்கத் தெரியுமே? சம்புவரையர் குதிரை லாயத்திலிருந்து இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து விடலாமே?" என்றான் வந்தியத்தேவன்.

"நான் சுவர் ஏறிக் குதிப்பேன். ஆனால் குதிரைகளுக்குச் சுவர் ஏறிக் குதிக்கத் தெரிய வேண்டுமே?" என்றான் வைஷ்ணவன்.

"பழுவூர்ப் பரிவாரங்கள் அங்கே வந்திருந்தால், இரண்டு குதிரைகளை அடித்துக் கொண்டு போகலாம். அவர்கள் முன்னொரு சமயம் கடம்பூரில் என்னுடைய குதிரையை விரட்டியடித்தார்கள் அல்லவா? அதற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்" என்றான் வாணர் குல வீரன்.

சில மாதங்களுக்கு முன்பு கடம்பூரில் அவர்கள் சந்தித்தது பற்றியும் அன்று இரவு நடந்த அபூர்வ சம்பவங்களைப் பற்றியும் வழி நெடுகப் பேசிக் கொண்டு வந்தார்கள். இருவரும் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்துக்குக் கடம்பூரை அடைந்தார்கள். கடம்பூர் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமர்க்களப்பட்டுக் கொண்டுதானிருந்தது. அரண்மனையும் கோட்டை வாசலும் கொடிகளாலும் தோரணங்களாலும் தொங்கல் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கோட்டை வாசலிலும் சரி, மதிள் சுவரைச் சுற்றியும் சரி, முன்னை விடக் காவல் பலமாக இருந்தது. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா? அதே சமயத்தில் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரும் ராணியுடன் வரப் போகிறார். இரண்டு பேருடைய பரிவாரங்களும் வருவார்கள். சில நாளைக்கு ஊர் தடபுடல் பட்டுக்கொண்டுதானிருக்கும்.

இதையெல்லாம் பற்றிக் கடம்பூர்க் கடைத்தெருவில் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்ததை இரு நண்பர்களும் கேட்டார்கள். ஜனங்கள் பேச்சிலிருந்து இரு சாராரும் இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஆதித்த கரிகாலரை அழைத்து வரக் காஞ்சிக்கே புறப்பட்டுப் போயிருக்கிறான் என்றும் தெரிந்தது. இந்தப் பரபரப்பான பேச்சுக்களுக்கிடையில் சிலர் 'கடல் கொண்டு விட்ட' இளவரசன் அருள்மொழிவர்மனைப் பற்றியும் மெல்லிய குரலில் பேசினார்கள். அவ்வளவு பெரிய துக்க சம்பவம் நடந்திருக்கும் போது இங்கே விருந்துகளுக்கும் களியாட்டங்களுக்கும் ஏற்பாடு நடந்து வருவது பலருக்குப் பிடிக்கவில்லை என்பது ஜாடைமாடையாக அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்தது.

ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் இந்தப் பேச்சுகளையெல்லாம் காது கொடுத்துக் கேளாதவர்கள் போல் கேட்டுக் கொண்டு ஊரைத் தாண்டிப் போனார்கள். ஊருக்குள் எங்கேயும் இரவு தங்க அவர்கள் விரும்பவில்லை. ஊருக்கு அப்பால் சமீபத்தில் எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது சத்திரம் சாவடி இல்லாமலா போகும்? அப்படியில்லாவிட்டால், இரவு வீரநாராயணபுரத்துக்குப் போய்த் தங்கி விடுவது நல்லது. அங்கேயுள்ள பெரிய பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் நிம்மதியாகப் படுத்து உறங்கலாம். முதன் நாள் இரவு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஓர் இரவு நல்ல தூக்கம் அவர்களுக்கு அவசியமாயிருந்தது. கடம்பூரைத் தாண்டிச் சாலையோடு சிறிது தூரம் சென்றதும் அடர்த்தியான மூங்கில் காடு ஒன்றும் அதற்குள் ஐயனார் கோவில் ஒன்றும் தெரிந்தன.

"வைஷ்ணவரே! இனிமேல் என்னால் நடக்க முடியாது. இரவு இந்தக் கோயிலில் படுத்திருக்கலாம். யார் கண்ணிலும் படாமலிருப்பதற்கு இது நல்ல இடம்!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்பனே! நீ சொல்வது தவறு. இம்மாதிரி இடங்களுக்கு நம்மைப்போல் இன்னும் யாராவது வந்து சேர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படி வருகிறவர்கள் குதிரைகளுடன் வந்தவர்களானால் ரொம்ப நல்லது" என்றான் வந்தியத்தேவன்.

"இந்த மூங்கில் காட்டுக்குள் எந்தக் குதிரையும் நுழைய முடியாது. மனிதர்கள் நுழைந்து செல்வதே கடினமான காரியம் ஆயிற்றே!"

"எங்கேயாவது ஒற்றையடிப் பாதை ஒன்று இல்லாமற் போகாது. கோயில் பூசாரி வரக்கூடிய வழியேனும் இருந்துதானே ஆகவேண்டும்?"

இருவரும் அடர்த்தியாக மண்டிக் கிடந்த மூங்கில் புதர்களைச் சுற்றிச் சுற்றி வந்து, கடைசியாகக் குறுகலான ஒற்றையடிப் பாதை ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதன் வழியாக உடம்பில் முட்கள் கீறாமல் நடந்து போவது மிகவும் பிரயாசையாக இருந்தது. இவ்விதம் சிறிது தூரம் சென்ற பிறகு கொஞ்சம் இடைவெளி காணப்பட்டது. அதில் சிறிய ஐயனார் கோவில் இருந்தது. கோவிலுக்கு எதிரே பலி பீடமும் அதையொட்டி மண்ணினால் செய்து காளவாயில் சுடப்பட்ட யானைகளும் குதிரைகளும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஐயனாருக்கு வேண்டுதல் செய்து கொள்ளும் பக்தர்கள் இவ்விதம் மண்ணினால் செய்த குதிரைகளும் யானைகளும் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.

அவற்றை பார்த்ததும் வந்தியத்தேவன், "குதிரைகளைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோமே? ஐயனாரைக் கேட்டு இரண்டு குதிரைகள் வாங்கிக் கொள்ளலாமே?" என்றான்.

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்ற பழமொழி தெரியாதா!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவனே! எங்கள் ஐயனார் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கேட்ட வரத்தை உடனே கொடுக்கக்கூடியவர், உங்கள் விஷ்ணுவைப் போல் பக்தர்களைத் தவிக்கவிட்டுப் பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருப்பவர் அல்ல!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால் இந்த மண் குதிரைகளுக்கு உயிர் கொடுத்தாலும் கொடுப்பார் என்று சொல்லு! ரொம்ப நல்லதாய்ப் போயிற்று பணம் மிச்சம்!"

"உண்மையான பக்தி இருந்தால், மண் குதிரைகளும் உயிர் பெறும்! பார்க்கப் போனால் நம்முடைய உடம்புகள் மட்டும் என்ன? பிரம்மதேவன் மண்ணினால் செய்து உயிர் கொடுத்ததுதானே?"

"நன்கு சொன்னாய், தம்பி! இந்த உடம்பு மண்ணினால் செய்த உடம்பு என்பதை மறந்துவிடுகிறோம். அதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் திருமண்ணைக் குழைத்து நெற்றியிலும், உடம்பிலும் இட்டுக் கொள்ளும்படி வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்!"

வந்தியத்தேவன் "உஷ்!" என்று சொல்லி, ஆழ்வார்க்கடியானுடைய கையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையினால் எதிரே சுட்டிக் காட்டினான். சூரியன் அஸ்தமித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டது. நாலாபுறமும் இருண்ட மூங்கில் தோப்புக்குள் சூழ்ந்திருந்த அச்சிறிய இடைவெளியில் மிக மங்கலாகத் தெரிந்த வெளிச்சத்தில் ஐயனாருடைய வாகனங்கள் உயிர் பெற்று அசைவதாகத் தோன்றின. ஒரு யானையும், ஒரு குதிரையும் இடம் பெயர்ந்து நகர்ந்தன. கண்ணால் கண்ட இந்த அற்புதத்தை நம்புவதா, இல்லையா என்று தெரியாமல் வந்தியத்தேவன் சிறிது நேரம் திகைத்து நின்றான். ஆனாலும் ஐயனாருடைய அற்புத சக்தியை ஆழ்வார்க்கடியானுக்கு உடனே உணர்த்திவிடக் கூடிய சந்தர்ப்பத்தை இழக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. "வைஷ்ணவரே! பார்த்தீரா?" என்று அவன் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் அவனுடைய கையை இறுக்கிப் பிடித்து, உதட்டில் விரல் வைத்துச் சமிக்ஞை காட்டி, பேச்சை நிறுத்தினான். பின்னர், இறுக்கிப் பிடித்த கையினால் வந்தியத்தேவனைப் பற்றியவாறு அவனை இழுத்துக் கொண்டு அந்த மூங்கில் புதருக்குப் பின்னால் சென்று நன்றாக மறைந்து நின்றான்.

குதிரையும் யானையும் அசைந்து சிறிது விலகிக் கொடுத்தன அல்லவா? அப்படி விலகிக் கொடுத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் ஒரு மனிதனுடைய தலை மட்டும் தெரிந்தது. அந்தத் தலை அப்பாலும் இப்பாலும் திரும்பி நாலுபுறமும் பார்த்தது. ஐயனாருடைய பலிபீடத்துக்கு பக்கத்தில் இம்மாதிரி ஒரு தலை மட்டும் தோன்றி நாலா புறமும் சுழன்று விழித்த காட்சி மிகப் பயங்கரமாயிருந்தது. எவ்வளவோ பயங்கரங்களைப் பார்த்திருந்த வந்தியத்தேவனுடைய மெய் சிலிர்த்தது; ஆனால் தன்னைப் பிடித்திருந்த ஆழ்வார்க்கடியான் கை சிறிதும் நடுக்கமுறாமலும் தளராமலும் இருந்ததை அறிந்து வந்தியத்தேவன் நெஞ்சுறுதி கொண்டான்.

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தத் தலை எழும்பி மேலே வந்தது. ஒரு மனிதனுடைய மார்பு வரையில் தெரிந்தது. பிறகு அம்மனிதன் முழுமையான உருவத்துடன் கிளம்பி மேலே வந்தான். அம்மனிதன் வெளி வந்த இடத்தில் ஒரு சிறிய பிளவு, கரிய, இருள் சூழ்ந்த பாதாள பிலத்துவாரத்தைப் போல, பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டிருந்தது. சற்று உற்றுப் பார்த்த பின்னர் அந்த மனிதன் யார் என்பதும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. கடம்பூர் மாளிகையில் பணியாளனாக இருந்துகொண்டே ரவிதாஸனுடைய சதிக் கும்பலிலும் சேர்ந்திருந்த இடும்பன்காரிதான் அவன்.

இதை இருவரும் ஏக காலத்தில் அறிந்து கொண்டதும் ஒருவரையொருவர் பார்த்துத் தங்கள் வியப்பைச் சமிக்ஞையினாலேயே தெரிவித்துக் கொண்டார்கள். இடும்பன்காரி திறந்திருந்த துவாரத்தை அப்படியே விட்டு விட்டு, மறுபடியும் ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஐயனார் கோவிலை நோக்கி நடந்தான். கோவில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். சிறிது நேரத்துக்கெல்லாம் கோயிலுக்குள்ளேயிருந்து முணுக்கு முணுக்கு என்று வெளிச்சம் தெரிந்தது. கோயிலுக்குள் விளக்கேற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்கள்.

"தம்பி! இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று முணுமுணுக்கும் குரலில் அடியான் கேட்டான்.

"ஐயனார் சக்தியுள்ள தெய்வம் என்று நினைக்கிறேன்; குதிரைக்கு உயிர் வந்ததைப் பார்க்கவில்லையா?" என்றான் வந்தியத்தேவன்.

"அது சரி! இப்போது வந்தானே, அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"அவன் ஐயனார் கோவில் பூசாரி போலிருக்கிறது. நாமும் போய்ச் சுவாமி தரிசனம் செய்யலாமா?"

"கொஞ்சம் பொறு! இன்னும் யாராவது சுவாமி தரிசனத்துக்கு வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளலாம்."

"இன்னும் யாரேனும் வருவார்கள் என்று நினைக்கிறீர்களா?"

"பின் எதற்காக இவன் விளக்குப் போடுகிறான்?"

"பூசாரி கோவிலுக்கு விளக்குப் போடுவதில் ஆச்சரியம் என்ன?"

"தம்பி! அவன் யார் என்று தெரியவில்லையா?"

"நன்றாய்த் தெரிகிறது, கொள்ளிடத்தின் தென் கரையில் எனக்குக் குதிரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தானே? அந்த இடும்பன்காரி இவன்தான்! இப்போதும் இவனிடம் குதிரை கேட்கலாம் என்று பார்க்கிறேன்.."

"நல்ல யோசனை செய்தாய்."

"உமக்குப் பிடிக்கவில்லையா?"

"இடும்பன்காரி உனக்குக் குதிரை வாங்கிக் கொடுத்தவன் மட்டும் அல்ல; ரவிதாஸன் கூட்டத்தைச் சேர்ந்தவன்."

"அப்படியானால் இன்னொரு நல்ல யோசனை தோன்றுகிறது." "என்ன? என்ன?"

"இடும்பன்காரி ஐயனார் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அவன் எங்கிருந்து வந்து முளைத்தான் என்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டு வரலாம் என்று எண்ணுகிறேன்."

"அது எப்படி முடியும்?"

"அவன் வெளியே வந்த துவாரத்தில் நான் உள்ளே போக முடியாதா?"

"முடியலாம், ஆனால் அதில் உள்ள அபாயங்கள்..."

"அபாயம் இல்லாத காரியம் எது?"

"அப்புறம் உன் இஷ்டம்?"

"வைஷ்ணவரே! நீங்கள் இங்கேயிருந்து என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருங்கள்..."

"அதற்கென்ன கஷ்டம்? நான் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுரங்க வழி எங்கே போகும் என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?"

"தோன்றுகிறது சுவாமி, தோன்றுகிறது! அது சரிதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அதை நீ எதற்காகத் தெரிந்து கொள்ள வேணும்?"

"ஏதேனும் ஒரு சமயத்தில் உபயோகப்படலாம் யார் கண்டது?"

அச்சமயம் சற்றுத் தூரத்தில் வேறு பேச்சுக் குரல்கள் கேட்டன. "தாமதிப்பதற்கு நேரமில்லை வைஷ்ணவரே! நான் திரும்பி வருகிற வரையில் இங்கேயே இருப்பீர் அல்லவா? அல்லது சுக்கிரீவன் வாலிக்குச் செய்தது போல் செய்துவிடுவீரா!"

"உயிர் உள்ள வரையில் இங்கேயே இருக்கிறேன் ஆனால் நீ திரும்பி வருவது என்ன நிச்சயம்?"

"உயிர் இருந்தால் நானும் திரும்பி வருவேன்..."

இவ்விதம் சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் நாலே பாய்ச்சலில் துவாரம் தெரிந்த இடத்தை நோக்கி ஓடினான். அதற்குள் இறங்கினான், மறு கணமே அந்த இருண்ட பள்ளத்தில் மறைந்தான். பிலத்துவாரம் அவனை அப்படியே விழுங்கி விட்டதாகத் தோன்றியது. கோயிலுக்குள் சென்றிருந்த இடும்பன்காரி வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தான், திறந்திருந்த துவாரம் கண்ணில் பட்டது. உடனே அவ்விடம் சென்று பலி பீடத்துக்குப் பக்கத்தில் நாட்டப்பட்டிருந்த சூலாயுதத்தைச் சுழற்றித் திருகினான்.

இடம் பெயர்ந்து அகன்றிருந்த யானையும் குதிரையும் மறுபடியும் நெருங்கி வந்தன. துவாரம் அடைப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது! இந்தக் காரியத்தைச் செய்துவிட்டு இடும்பன்காரி மறுபடியும் வாசற்படியண்டை வந்தான். அதே சமயத்தில் ரவிதாஸன், சோமன் சாம்பவன் முதலியவர்களும் வேறு திசையிலிருந்து வந்து சேர்ந்தார்கள். ஆழ்வார்க்கடியான் மூங்கில் காட்டுக்குப் பின்னால் இன்னும் நன்றாக மறைந்து கொண்டான். கோவில் வாசற்படி மேல் ரவிதாஸன் உட்கார்ந்து கொண்டான் மற்றவர்கள் அவன் எதிரே தரையில் அமர்ந்தார்கள்.

"தோழர்களே! நாம் கைக் கொண்ட விரதம் நிறைவேறும் சமயம் நெருங்கிவிட்டது!" என்றான் ரவிதாஸன்.

"இவ்வாறுதான் ஆறு மாதமாக 'நெருங்கிவிட்டது' 'நெருங்கிவிட்டது' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்றான் ஒருவன்.

"ஆம், அதில் தவறு ஒன்றுமில்லை; ஆறு மாதமாகவே அந்த நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தது. விரல்விட்டு எண்ணக் கூடிய நாள் கணக்கில் நெருங்கி விட்டது. ஆதித்த கரிகாலன் காஞ்சியை விட்டுக் கிளம்பிவிட்டான் என்ற செய்தி வந்திருக்கிறது. திருகோவலூர்க் கிழவன் அவனைத் தடுத்து நிறுத்தச் செய்த பிரயத்தனம் பலிக்கவில்லையாம்!"

"வழியில் வேறு யாராவது தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?"

"ஆதித்த கரிகாலன் முன் வைத்த காலைப் பின் வைக்கிறவன் அல்ல, இனி யார் தடுத்தாலும் கேட்க மாட்டான்..."

"அவனுடைய சகோதரி சொல்லி அனுப்பிய செய்தி போய்ச் சேர்ந்தால்..."

"அது எப்படிப் போய்ச் சேரமுடியும்? செய்தி கொண்டு போன வாலிபனைத்தான் காட்டில் கட்டிப் போட்டு விட்டு வந்தோமே?"

"அழகுதான்! அவனை இன்று காலையில் கொள்ளிடத்தின் வடகரையிலே பார்த்தேன். அவனோடு நமது இன்னொரு பகைவனும் சேர்ந்திருக்கிறான்."

"அது யார்?"

"போலி வைஷ்ணவ வேஷதாரி!"

"அப்படியானால் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது தான். அவர்கள் ஆதித்த கரிகாலனைச் சந்திக்காமல் தடுக்கப் பார்க்க வேண்டும்."

"தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இருக்கிறது. கையில் அகப்பட்டவனை அங்கே ஒரு வழியாகத் தீர்த்திருக்கலாம். ராணி எதற்காக அவனை உயிரோடு விடச் சொன்னாள் என்று தெரியவில்லை...."

"தோழர்களே! எனக்கும் அது அப்போது புரியாமல்தான் இருந்தது. அப்புறம் தெரிந்து கொண்டேன்; ராணி என்னையும் மிஞ்சிவிட்டாள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். மிக முக்கியமான ஒரு நோக்கத்துடன் தான் வந்தியத்தேவனை உயிரோடு விடச் சொன்னாள் ராணி. அதை நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வந்தியத்தேவனைப் பற்றிக் கவலை வேண்டாம். ஆனால் அந்த வைஷ்ணவனைக் கண்டால் சிறிதும் தயங்காமல் உயிரை வாங்கிவிட்டு மறு காரியம் பாருங்கள்..." என்றான் ரவிதாஸன்.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. ஐயனார் கோவில்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: