அன்பின் தோழமைகளே, பாசமிகு BTC உறவுகளே! நான் விரும்பி வாசித்த பல கட்டுரைகளுள் இது என்னை மிகவும் கவர்ந்தது. சக்திவிகடனில் வெளிவந்த இவ் ஆக்கத்தை (சற்று சுருக்கி உள்ளேன் ) உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி.
விருந்தோம்பல்...... பசித்தோர்க்கு அன்னமிடல்
அது 2003-ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி. அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பரிதவித்த வேளை... சாதாரண செயல்களுக்குக்கூட மின்சாரத்தை நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்குப் பேரிடியாக இருந்தது அன்றைய இரவு. மின்சாரம் இன்றிச் சமைக்க முடியவில்லை; வங்கியில் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமும் வேலை செய்யவில்லை. ஆக, உண்ண உணவும் இல்லை; வெளியில் வாங்கிச் சாப்பிடலாமென்றால் கையில் பணமும் இல்லை.
இந்த நிலையில், பலநூறு பேருக்குத் தனது ஹோட்டலில் இலவச உணவளித்தார், இந்தியரான ஸ்ரீநிதின் வ்யாஸ். ஒரு பாட்டில் தண்ணீர் ஐந்து டாலர் என விற்ற தருணத்தில், அனைவருக்கும் இலவசமாகவே தண்ணீர் வழங்கினார்.
மறுநாள்... அவருக்குப் பணம் தர பலரும் முன்வந்தனர்; பாராட்டுக்களும் குவிந்தன. 'உங்களால் எப்படி இது சாத்தியமாயிற்று?' என வியந்தபடி கேட்க... ''இது எங்கள் தேசத்தின் பண்பு'' என்றார் ஸ்ரீநிதின் வ்யாஸ். இந்தியாவின் தேசிய நற்பண்பு விருந்தோம்பல். தன் வயிறு நிரம்பினால் போதும், தன் குடும்பத்தார் சாப்பிட்டால் போதும் என எண்ணாமல், எல்லோரும் பசியாறி, இன்புற்றிருக்க வேண்டும் எனும் உயரிய சிந்தனைதான் இதன் அடிப்படை!
உறவு மற்றும் தோழமைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதையே விருந்து என நினைக்கிறோம். 'விருந்து என்பது புதுமை' என்கிறது தொல்காப்பியம். குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் தவிர, முன்பின் அறிமுகமே இல்லாதவர்தான் விருந்தாளி. முகம் தெரியாத மூன்றாம் மனிதருக்கு, தவித்த வேளையில் உணவிடுதல் போன்ற சிறந்த அறம் எதுவும் இல்லை.
முன் அறிவிப்பு இன்றி வருபவரே விருந்தாளி. அவரைக் கடவுளாகவே கண்டு போற்றச் சொல்கிறது வேதம். அவரைப் போற்றுவதே இல்லறத்தானின் முதல் கடமை!
விருந்தாளியைப் போற்றுகிறவனின் வீட்டில் திருமகள் நிரந்தரமாக, மகிழ்வுடன் வசிக்கிறாள். 'விருந்தாளிகளை உள்ளன்புடன் கவனித்துக்கொள்பவனது நிலத்தில், விதைக்கவும் வேண்டுமோ?!' என்று கேட்கிறார் திருவள்ளுவர். அதாவது, இறைவனே அவர்களுக்கு வேண்டியதைத் தருவான் என்பதே அர்த்தம்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
வீட்டுக்கு வந்த விருந்தினரின் உள்ளம் குளிரும்படி உபசரித்து, அவர் சென்றதும் அடுத்த விருந்தினரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவன், தேவர் களுக்கு பிரியமானவனாக இருக்கிறான் என்கிறார் வள்ளுவர். 'செல்விருந்து' என்பதற்கு 'இருக்கும் இடம் தேடிச் சென்று உணவு அளித்தல்' என திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தந்த விளக்கம், ரசித்து ஏற்கத்தக்கது.
நம் தேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த விருந்தோம்பல், இன்றைக்கும் உயிர் வாழ்ந்துகொண்டி ருக்கிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள கிராமங்களில், முன்னறிவிப்பு இன்றி சென்றாலும், ஐந்நூறு பேருக்கு உணவளித்துவிடுவார்கள் என்பது இப்போது வரை தொடர்கிறது. நீலகிரி மாவட்ட மலைக்கிராமங்களில், ஒவ்வொரு விருந்தாளிக்கும் உணவு தந்து, அவரை நிற்க வைத்து, நெற்றி நிலம்பட விழுந்து வணங்கும் உயர்ந்த பண்பு உண்டு!
ஒருவரின் இல்லத்தில் அறுசுவை உணவே பரிமாறப்பட்டாலும், அவரது முகம் கடுகடுப் புடன் இருந்தால், விருந்தாளியின் முகம் அனிச்ச மலர் போல் வாடிவிடும். எனவே, உணவு அளித்தால் மட்டும் போதாது; இனிய சொற்களுடன் உபசரிப்பதும் அவசியம்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
விருந்தோம்பலை மேற்கொண்டால் மட்டும் போதுமா? அடுத்த தலைமுறை யினரும் அதைக் கடைப்பிடிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் கண்டு குழந் தைகள் ஏளனப் பார்வை பார்ப்பது, அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டுவது, அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்வது போன்றவை இன்றைக்கு வீடுகளில் பரவலாகக் காணப்படும் அன்றாடக் காட்சிகள்!
விருந்தினரை முகம் மலர வரவேற்று, அமருவதற்கு இடம் அளித்து, அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தரும் பொறுப்புகளைக் குழந்தைகளிடம் ஒப்படைக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் நம் பண்பாட்டைக் கற்றுக்கொள்வார்கள்.
முந்தைய தலைமுறையைவிட, தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் கைகளில் பணம் அதிகமாகவே தவழ்கிறது. கூடவே, பண்பும் அதிகரிக்க வேண்டும். விருந்தோம்பல் எனும் உயரிய அறத்தை அன்புடன் மேற்கொள்வோம்; வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்; புதியதோர் உலகம் படைப்போம் !
- ப்ரியமுடன்.
(நன்றி : சக்தி விகடன்)